ஞாயிறு, ஜூலை 05, 2015

ஆர்த்து எழு ! பகுத்தறிவு பூண!

பொருளுக்கு பாடவென புலவோர் பலரிருக்க
பொருளாய் பாடவந்த புலவோரே
அருளாய் பாடவல்ல அரங்கத் தலைமை
வெறும் பொழுதாய் பாடுகின்ற புலவன் நான்
உங்களோடு
பொறுத்தருளும் – ஐயன்மீர்
ஆனாலும் அவ்வப்போ – நல்ல
பொழுதுக்கும் பாடுவேன் நான்.

கொஞ்சும் சலங்கை
பட்டுச்சரிகை
கிட்ட வந்து கைபிடித்து குசலம்
நீங்கள் எங்க – ஓ அந்த ஊரே
அங்க போஸ்ட்மாஸ்டர் பொன்னம்பலத்தை தெரியுமே
எங்கள் பெரியப்பாவின் ஒன்னு விட்ட சித்தப்பா மகன் – என்று
கிட்ட வந்து கைபிடித்து குசலம்
நல்லாத்தான் போய்க்கொண்டு இருக்கு இந்த ரெண்டு நாளும்
அனால் என்ன
Monday யை நினைச்சாதான்
மண்டை விறைக்குறது
இருந்தாலும்
சில
Mondays தாங்கும் இந்த நினைவு.

ஆர்த்து எழு !
பகுத்தறிவு பூண!

பகுத்தறிவு பற்றி – கொஞ்சம்
பகுத்து அறிவோமா ?

பகுத்தல் தான் அறிவதற்கான வழி.
அறிந்த பின்,
தொகுத்தல் தான் அதன் வெளிப்பாடு.
இப்படி,
அறிந்தவன் தொகுத்ததுதான்
கல்வி
அதை நாம் பகுத்து உணர கேட்பதுதான்
கேள்வி

பகுத்தறிவு பற்றி – கொஞ்சம்
பகுத்து அறிவோமா ?

கல்வியில் சிறந்த தமிழ் நாடே,
கொஞ்சம் கேள்வியிலும் நீ சிற.

கேட்கத் தெரிந்தவன் – காதுகளால்
கேட்கத் தெரிந்தவன் தான்
கேட்க்க முடியும்
கேள்வியை - செரிவர
“கடவுளை காட்ட முடியுமா?” என்று கேட்டவன்
கடவுளை அறிந்தான்
“ஆப்பிள் எதற்கு கீழே விழுகிறது?” என்று கேட்டவன்
ஈர்ப்பை அறிந்தான்
மனிதர்களின் இறப்பை கேள்வி கேட்டவன்
ஞானம் பெற்றான்.
“யாராய் கேக்குறாய் வரி ?” “எதற்கு கேக்குறாய் வரி?” என்று கேட்டவன்
சுதந்திரத்தின் அடையாளம் ஆனான்.

உன்னுடைய கேள்வியும் – அதன் மீதான தேடலும் தான்
உன்னுடைய அறிவையும் அடையாளத்தையும்
தீர்மானிக்கின்றன

ஆண்டவனாய் இருந்தாலும் – அவனை
அறிந்தவன் என்று சொன்னாலும் – நம்மை
ஆள்பவனாய் இருந்தாலும் – ஈன்று
பெற்று வளர்த்தவனாய் இருந்தாலும் – ஆய்ந்து
கல்வி கற்று தருபவனாய் இருந்தாலும்

கேளு,
உந்தன் கேள்விக்குள்,
எல்லாரும், எல்லாமும் உட்பட்டத்துதான்.

இது விளம்பர உலகம்,
கேள்விதான் - இங்கு
வாழ்வதற்கான வழி

கடவுளை,
கடனை (கிரடிட் கார்ட்)
கற்பை – ஏன்
எளிமையைக் கூட
கூவிக் கூவி விற்கிறார்கள்.
நாங்கள் தான் தெரிந்து வகை ஆட வேண்டும்.

“அன்பு நண்பர்காள்,
ஆர்த்து எழுங்கள்
பூணலாம் பகுத்தறிவு
அடையலாம் பெரும் சிறப்பு”

என்று அறைகூவ
எனக்கு அச்சமாய் இருக்குறது
விளம்பரங்களின் வியபகத்தில்
கூசிப்போன காதுகளில்
நானும் பத்தோடு பதினொன்றாக
சம்மதமில்லை

எங்கள் காது வந்து சேர்கின்ற – இற்றை
அழைப்புகள் எல்லாம்
உள்ளுக்குள்
பூடகமாய் ஒன்றை
பூட்டியே வைத்திருக்கின்றன.

கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர் - என்பதுதான்
இறை உணர்வு.
ஆனால் இங்கே,
அதிகம் விற்க்கப்படதுவும் - கேள்விகள் ஏதுமின்றி
அதிகம் வாங்கப்பட்டதுவும்
இறை உணர்வுதான்

இராமர் ஆண்ட இடம் இது – மசூதியை
இடித்து விட்டு
கோவில் கட்டு – என்றால்
உனதிறைவன்
உலகையே ஆண்டவன் என்றல்லா நபியிருந்தோம்
என்று திருப்பிக் கேளு

போத்தீஸ் விளம்பரங்கோளோடு
போட்டி போடும் – அலங்கார
போதகர்களா – உங்களுக்குப்
போகம் அறுத்து
காட்டிடுவார் பேரின்பம் ?

அல்லா பெயரால் அடி என்றால் –
கேள்வி இன்றி அடித்துவிடு,
சொன்னவனை
பாதகமில்லை
ஏழைகளின் வீட்டிற்கு இறைவன்
ரொட்டி வடிவில் மட்டும்தான் வருவான்
கூடவே
துப்பாக்கிகளையும் தருபவன் சாத்தான்.

முடியப் போகிறது உலகம்
கூடச்சேர்
உன்னை மட்டும் காப்பாற்றுகிறேன் – என்பவனிடம்
உலகுக்கே சிலுவை சுமந்தவனை
உந்தன் மத்த்துக்காய் மட்டும் – என்று
மட்டுப்படுத்ததே – என்று
மறுத்துவிடு.

வாக்கு கேட்டு வருபவனிடம்
கொள்கைகளை கேளுங்கள்
கொள்ளையில் பங்கில்ல

இலவசம் தான் – எங்கள்
கொள்கை என்றால் –
ஆகிடுங்கள் உசார்
அதற்கும் சேர்த்து
நீங்கள் தான் கட்டவேண்டு வரி.

அன்பானவர்களே
உங்கள் குழந்தைகளுக்கு
கேள்வி கேக்க
கற்று கொடுங்கள்.

கேள்வி எப்படி உரிமையோ
பதில் அப்படிக் கடமை
என்பதை சொல்ல மறவாதீர்.

கேட்பது என்பது கலை. – அதைப்
பயின்றால் உயரும் உங்கள் நிலை.

ஆர்த்து எழு – நண்பனே,
எழுந்து கேளு உந்தன் தலைமுறைக்கான கேள்விகளை
கேட்பதனால் பூணலாம் பகுத்தறிவு
பூண்பதினால் செய்யலாம் பெரும் செயல்கள்
செய்வதனால் காணலாம் புது விடிவு.

ஞாயிறு, மே 10, 2015

காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி…

காதலாகி…

கண்டனன்.
கனலாக உருகி மனம் கன்னினன்!
கொண்டனன்
முன்னும் பின்னும் மனைமாட ஒரு குழப்பம்!
ஈர்த்தனள்
இன்னது என்று சொல்லொணா இயல்பினால்
உணர்ந்தனன்
தன் வயதின் வினாவுக்கு ஒரு விடை
காதல் – ஆகி!

கசிந்து…

சிரித்தனர்
முன்னும் பின்னுமாய் நண்பர்கள்
பேசினர்
சிலேடை, சின்னதாய் கவ்வ வெட்கம்
பார்த்தனர்
அங்கும் இங்குமாய் என்று ஊர் சொல்ல
மறை(ந்)த்தனர்
தலை, மறுக்காமல் மனது மெல்ல நகை கொள்ள
கசிந்தது – சேதி!

கண்ணீர் மல்கி…

கொண்டனர் - உரு
குலச் சாதி சனம்
விண்டனர்
தங்கள் விருப்பதற்கு - ஒரு வன்மத்தை
மாய்த்த்தனர்
இருவரும் இது பொறுக்காது
வருந்தினர்
பொய் மானத்தால் கொண்ட இழப்பை எண்ணி
கண்ணீர் மல்கி….

வியாழன், மே 07, 2015

மங்களா ஹோல்ட்!!!

சிரிக்க வைச்சா சிரியுங்கோ, தயவு செய்து மாறிக் கீறி சிந்திச்சுடாதேங்கோ…
கவிஞ்ஞர் கே.கா: கலோ அண்ணை.
வாலிபன்: கலோ?
கே.கா: அண்ணை, நான் கவிஞ்ஞர் கே.கா பேசுறன். ஆசிதிரிலேயாவிலிருந்து.
என்னடா புதிசா ஒரு புனை பெயர் சொல்லுறாய்?
எல்லாம் ஒரு பாதுகாப்புதான்.
அதை விடுங்கோ, அண்ணை எனக்கு ஒரு சந்தேகம். முதல் தெரிவே இப்படி முச்சு முட்டுதே. ரண்டாம் மூணாம் தெரிவு எல்லாம் எப்படி இருக்கும் ? பாவம் அண்ணை உள்ளூர் பெடியள். இல்லை ஒரு வேளை நாமக்குதான் செலக்ட் பண்ண தெரியலையோ ?

டேய்! டேய்! ஸ்பீக்கர் போன்டா. (பாய்ந்து கட் பண்ணிய படி). ஹி ஹி, (இழித்தபடி பின்னல் திரும்பி), சொறி அம்மா இவனை யார் எண்டே எனக்கு தெரியாது.

கனம் வகுப்பு ஆசிரியருக்கு,
எனது பாட்டி மைதிலி அவர்கள் சிவனடி சேர்ந்துள்ளார்கள் என்று உதயன் பேப்பர் வழி அறிந்து விடுமுறை கேட்டு இருந்தேன். ஆனா நீங்கள் எனக்கு அதை வழங்க வில்லை. எனக்கு ஒரு கேள்வி, சிம்பிள், ஏன் ?
ஏன் மைதிலி பாட்டிக்கு மட்டும் லீவு தரவில்லை. மைதிலி பாட்டி மீது எனக்கு அன்பில்லை எண்டு நீங்கள் சொல்ல முடியாது . ஏன் எண்டால் நான் அவாக்கு வெத்திலை சீவல் எல்லாம் வாங்கி தந்திருக்குறன். நீங்கள் முன்னம் கோபால் தாத்தா அந்தியட்ட்க்கே நீங்கள் லீவு தந்தனீங்கள், கஜா மாமா கலியாணத்துக்கு கூட லீவு எடுத்து ‘கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு …’  எண்டு ஸ்டேட்டஸ் போட்டு செலேப்ரெட் பண்ணினான். அதேன் அன்றைக்கு மூணுவிட்ட சீத்தா பாட்டி செத்ததக்கு கூட லீவு தந்தனியல், இவ எண்ட சொந்தப் பாட்டி, ஆனா லீவு தரலையே ?

……….
இப்படிக்கு,
உங்கள் அன்பு மாணவன்
கே.கே

பக்கத்து வகுப்பு ஆசிரியர்
அன்பின் கேகே,
நான் ஒருவாட்டி முடிவு பண்ணினா
என் பேச்சை நானே கேட்கமாட்டன்,
அதனால் தாங்கள் கேட்டாலும் ஊகும்.
* * *
நீங்கள் எனது வகுப்பில் அதிகம் கவனிக்காது இருப்பதால்
உமக்கு எனது பாடங்கள் மூன்றே மாதத்தில் மறந்து விடும்
எனவே எமது வகுப்பில்  நீங்கள் பங்காளிகள் அல்ல வெறும் பார்வையாளர்கள்
அதனால் உமக்கு நான் பதில் தர தேவையில்லை.
நல்லா மார்க்ஸ் எடுக்கிற மாணவர்கள் லீவு கேட்க மாட்டினம்
* * *

சங்கம்: வறுத்த படாத (பாடு படும்) உள்ளூர் வாலிபர்கள்
நிகழ்வு: பாராட்டு விழா
உள்ளூர் வாலிபர்களின் ஆபத்பாண்டவராக இருக்கும் புரோக்கர் பொன்னுசாமி அவர்களின் அம்பது உள்ளூர் திருமணங்களை நடத்தி வைத்த நிகழ்வை பாராட்டி எடுக்கும் விழா.
தலைமை: கஜேந்திரன் -சுங்க அதிகாரி (சிரேஷ்ட உள்ளூர் மாப்பிளை)
பாராட்டுரை: அதி சிரேஷ்ட உள்ளூர் மாப்பிளை கீர்த்தி (பல வெளிநாடுகள் கண்டவர், வல்லவர், நல்லவர், நாலும் தெரிந்தவர்)
ஒருங்கிணைப்பாளர்: கனிஷ்ட உள்ளூர் மாப்பிள்ளை டாக்டர் வருண்.