புதன், அக்டோபர் 24, 2012

விண்ணைத் தாண்டி வருவாயா ? !


அதே வழமையான புன்னைகை
அதே வழமையான விசாரிப்புகள்
கடந்து போகிறோம்
பூடகங்களோடும்
புதிர் போடலோடும்

அந்தச் சிக்கலை
அவுழ்க்கவும் ஆகாது
வெட்டவும் ஒண்ணாது
மனதும் மூளையும்
மயங்கிக்கிடக்கிறது

நீ
கைப் பையை திறந்தாலோ
நான்
பர்சை திறந்தாலோ
கதை சுபம்தான்

உள்ளே தூங்கி கிடக்கு
எங்களுக்கான காதல் கடிதங்கள்.

முடறு வரை
வந்தவார்த்தை
முழுங்கப் படுகிறது
தடுப்பது
சுயமா பயமா
தெரியவில்லை



விளிம்பில் நிற்கிறது மனசு
எட்டிப் பார்த்தல் விழுந்து விடும்
ஒரே கிண்ணியில் எதிர் எதிராக இல்லை
இரு வேறு கிண்ணிகள் அருகருகா - பயம்
நான் முதலா ? நீ முதலா ? - தயக்கம் (சுயம்)

அதே வழமையான புன்னைகை
அதே வழமையான விசாரிப்புகள்
கடந்து போகிறோம்
பூடகங்களோடும்
புதிர் போடலோடும்

இரண்டு கெட்டிக்காரர்களுக்கு
காதல் கடினமாகிறது
காதலில்
கெட்டித்தனத்தை காட்டுவதால்
காதலிப்பதில்
காட்ட வேண்டியதை
காதலிக்கப் படுவதில்
காட்டுகிறார்கள்

அதே வழமையான புன்னைகை
அதே வழமையான விசாரிப்புகள்
கடந்து போகிறோம்
பூடகங்களோடும்
புதிர் போடலோடும்

அந்தச் சிக்கலை
அவுழ்க்கவும் ஆகாது
வெட்டவும் ஒண்ணாது
மனதும் மூளையும்
மயங்கிக்கிடக்கிறது

இவங்களுக்கு வேற வேலை இல்லை ? பகுதி இரண்டு


இவங்களுக்கு வேற வேலை இல்லை இருக்கு!
பாகம் இரண்டு - காடு திறந்து கிடக்கின்றது
கண்கள் நிறைய கனவுகளோடும், பாக்கெட் நிறைய போறோகிறாம்களோடும், மெல்லிய பதைபதைப்போடும் இந்த போட்டியில் பங்குகொள்ளும் ஹீரோ , ஹீரோயின்களுக்கு,

ஏலவே யாழ் ஐடி இல் ‘சேர்’மார்களையும், அண்ணா அக்கா மார்களையும் கண்டு பிரமித்து மகிழ்ந்து இருக்கும் உங்களுக்கு உங்கள் கூட்டாளி இந்த வால்ப் பயல் வாலிபனின் வணக்கங்கள் அல்லது  பாராட்டுகள் எப்படி வேணும் எண்டாலும் வைச்சுக் கொள்ளுங்கள்.

எப்படி பேசுவது, என்ன பேசுவது, எதை பேசுவது போன்ற பலவற்றை ஏலவே நிறைய பகிர்ந்துவிட்டார்கள். நான் இந்த டெக்னிக்கல் மாட்டார் பேசப் போவதில்லை,

மச்சி வெற்றி தோல்விகளை ஒதுக்கி விட்டு, சும்மா பூந்து வா – அனுபவி, அவதானி.

சயந்தன் பேசுகிற போது எப்படி conjunction ஐ லாவகமாகப் பயன் படுத்துகிறார், விமல் என்ன நிறத்து கால் சட்டைக்கு என்ன நிறத்தில் சேர்ட் போடுகிறார், கவுரி அக்காவின் நேர் கொண்ட பார்வை - அதில் கனிவு, பாலா ஒன்றை சொல்வதற்கு முன் சிந்திப்பதற்கு என்று யாருக்கும் தெரியாமல் எப்படி நேரத்தை களவாடுகிறார், சர்வேஸ் தமிழ் மொழியிலேயே தொழில்நுட்பத்தை எப்படி நாசூக்காக பேசிவிடுகிறார். இப்படி கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு – தேடிப்பார்.

புதிய மனிதர்களோடு தயக்கம் இன்றி பழகு - முகம் மலர்ந்து முகமன் கூறு, உற்சாகமாகப் பேசு, அழுத்தமாக கை குலுக்கு.

சித்திரம், செந்தமிழ், ஆங்கிலம், design patterns, optimization, smart coding எல்லாம் பழக்கம்தான் - பழக வரும். உன் மீது நம்பிக்கை கொண்டு குறைந்தது ஓராயிரம் கண்களாவது உலகெங்கும் உன்னிப்பாய் இந்த நிகழ்வை அவதானிக்குறது - உன் நீட்சி ஏலவே பெரிது.

நல்ல பெடியன் நாய்ப் பழக்கம் எண்டு ஒரு வழக்கு உண்டு - அது புளோக்கர்களுக்கு சாலப்பொருந்தும். இளையராஜவில் இருந்து இஸ்றேல் பிரதமர் வரை என்ன செய்ய வேணும் எண்டு சொல்லுவது எங்கள் வழக்கம் -
              கண்டு கொள்ளாதே -
               உனக்கு என்ன செய்ய வேணும் எண்டு தெரியும்
                        - சும்மா புகுந்து விளையாடு.

"நாங்கெல்லாம் அப்பவே அந்தமாதிரி இப்ப கேக்கவா வேணும்."

அன்பின்,
வாலிபன்

பி.கு: cheers-girls இக்குகாக வரச்சொல்லி உந்தன் பாட்டிமாருக்கு கடிதம் எழுதிய அப்பாவி நாந்தான்.

முந்தய பாகம் 

வெள்ளி, அக்டோபர் 19, 2012

சோகமா ஒரு வாரம்


ஓரடி மாலை,
ஒரு ரோசாப் பூ,
கொஞ்சம் இயக்கப் பாடல்,
சோகமா ஒரு வாரம்.

கிரடிட் கார்ட் பில்,
காஸ் விலை ஏற்றம்,
மன அழுத்தம்,
மெல்ல மறந்து போகும்.

ஓரடி மாலை,
ஒரு ரோசாப் பூ,
கொஞ்சம் இயக்கப் பாடல்,
சோகமா ஒரு வாரம்.

வடை பாயசம் படைச்சு
விரதம் இருக்க
மாவீரர் ஒண்டும்
நல்லூர் முருகனோ
சுடலை வயிரவரோ இல்லை அடா!

கடைசியில்
அடிச்சது விட்டு,
அடிக்காம விட்டு,
அகப்பட்டு செத்ததெல்லாம்;
அம்புட்டுத்தானா?

நீ வாழ செத்தவன் சொல்கிறேன் கேள்
யாராவது வாழ நீ வாழப்பா.
என்னை நீ நினைத்திருப்பாய் 
என்பதற்கா என் சாவு - இல்லையடா
ஏதோ ஒன்றை நடந்திடாதா 
என்பதற்காய் என் சாவு.

அள்ளுப் பட்டுப் போய்
கொத்துக் கொத்தா செத்ததெல்லாம்
நீ அழுது முடங்க வல்ல.

கண்கள் துடைத்து எழுந்துவா -
கைகள் தேய்த்தவடி.
வெட்டி முறித்து வேலை செய்.
அதை கொட்டி களித்துக் கொண்டாடு -
தப்பில்லை.

பாதி வயித்துக் கஞ்சிக்கு
பார் பார்த்து நிக்கும் உந்தன் முட்டைக்
கோது வயித்துக் குஞ்சுக்கு
கொஞ்சமாவது கொடுத்து அனுப்பு.

அள்ளி முடிச்சு அறுவடை செய்
சீவி முடிச்சு சிங்காரி - அதுக்கு முதல்
பள்ளிக்கு கொஞ்சம் பகிர்ந்தனுப்பு.

கட் அவுட் கொண்டு வந்தால் -விகிதாசாரப்படி
கட் அவுட் கொண்டு வந்தால்
கட் - அவுட் ஆயிடுவமோ

துள்ளி எழு
துடை விளக்கு சிமினி
அள்ளிக் கட்டி
அளவில்லாமல் படி
அறுவடைக்கு காலம் வரும்

அண்டைக்கு

கட்டு படைக் கோயில் - எமக்கு
கனகு, மல்லி எண்டு
கொட்டு பூக்குவியல்.
பாடு புதுராகம்.
கொண்டாடு - 
சோகமா ஒரு வாரம்
சுகமாக.



திங்கள், அக்டோபர் 15, 2012

இவங்களுக்கு வேற வேலை இல்லை ?

இவங்களுக்கு வேற வேலை இல்லை இருக்கு!

பாகம் ஒன்று - கூண்டை விட்டு…..

இலங்கை வடக்கே வாழும் வயோதிகர்களுக்கு, அம்மம்மா, அம்மப்பா -களுக்கு , அப்பப்பா அப்பம்மா -களுக்கு, அம்மா அப்பா -மார்களுக்கு,

இதுவரை வெள்ளவத்தை பஸ் வண்டித்தரிப்பிடம், கட்டுப்பத்தை, கத்தரிக்காய், காதல், வயதுப் பிரச்சனைகள் போன்ற வாலிப விடயங்களை மட்டும் விசாரித்து, விமர்சித்து எழுதி வந்த இந்த ஏதென்சு நகரத்து வாலிபன் முதல் முறையாய், பனை மரக் காடுகளில் மரத்துப்போன மனங்களும் விறைத்துப்போன கால்களுமாய் வாலிபம் கடந்த உங்களுக்காய் எழுதும் மடல்?, காகிதம்!, இல்லை விண்ணப்பம் என்று வைத்துக் கொள்ளலாம். இடைக்கு இடை எணை, அப்பு, ஆச்சி, ஆன்ரி, அங்கிள் எண்டு போட்டுக் கொள்ளுங்கோ.

வயது முடிந்த காலத்தில் வெத்திலை இடிச்சுக் கொண்டோ, இல்லை வயிரவ கோவிலடியில் விளக்கு ஏத்திக் வைச்சுக் கொண்டோ, இல்லை வாசகசாலையில் அரட்டை அடிச்சுக் கொண்டோ, ‘சிவனே‘ என்று நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் அ(ம்மா/ப்பா)(மா/பா) களுக்கு. வணக்கம்! (எணை காது நல்லாக் கேக்குதே?)

சுப்பர் சிங்கர்களுக்குள் புதைந்துபோன அம்மாக்களுக்கு வணக்கம். டீவிப் பெட்டியில் காட்டப்படாத இரத்தமும் சதையுமான ஒரு அழகான உலகம்- மனிதர்கள் போதாது வெறித்துப் போய் இருக்கின்றது. (வெளிய வந்தாத்தானே - முட்டாளாவதில் மகிழ்வது பெண்களாத்தான் இருக்கும், இப்ப கூடப் பாருங்கோ உங்கட ஆக்கவுடமையை பற்றி ஆதங்கப்படுவது புரியாமல் உங்கட அறிவுடமையை கேலி செய்வதாய் கோபப்படுகிறீங்க).

வேலை, விளைமீன் குழம்பு, சீலாமீன் பொரியல், கோயில் 8ம் திருவிழா மேளக்கச்சேரி, ஏறி வரும் விலை வாசி என்று பரபரத்துப் போன அப்பாக்களுக்கு வணக்கம். வாழ்க்கை என்பது என்ன என்பதே உங்களில் பெரும்பாலானர்களுக்கு நாப்பதுக்கு பிறகு மறந்து விடுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. சமூக வாழ்க்கை என்பது உங்களில் பலருக்கு கோயில் என்பதோடு நின்று போய்விடுகிறதோ என்ற நான் நிறைய அங்கலாத்திருக்குறேன்.

முடங்கிப்போன பெரியவர்கள், முயக்கம் இல்லாத தாய் தந்தையர், இளையதலை முறை ?

வாழ்வு என்பது வெற்றி தோல்வி என்ற முடிவைக் காட்டிலும் முயற்சியில் இருக்குன்றது என்று முயன்று வென்றவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

ஒரு பெரிய போராட்டம் அடித்து நொறுக்கப் பட்ட பின்னரும், கூட்டம் கூட்டமாய் இன சனம் அழிந்த பின்னரும் இந்த சமூகத்தின் எல்லாத் தேவை மட்டங்களில் (maslow’s hierarchy of needs)  இருக்கும் சில இளைஞர்கள் ஒரு கனவை (“Making Yarl the next Silicon Valley") நோக்கி நகரமுயல்கிறார்கள் –. உங்கள் ஊருக்கு உங்கள் பிள்ளைகள் ஒரு தேர் எடுத்து வந்திருக்குறாங்கள் – “Yarl Geek Challenge", கொஞ்சம் கை கொடுக்க வறீங்களா (ஒக்டோபர் மாசம் இருபத்தி ஆறாம் திகதியில் இருந்து இருபத்தி ஓம்பதாம் திகதி வரை)?



சுப்பர் சிங்கரில் யாழினி எடுபட்டது பற்றியும், அனு எடுபடாதது பற்றியும் அங்கலாய்த்துக் கொண்டு இருப்பீர்கள். ஒரு ரியால்லிடி ஷோவை நேரடியாய் யாழ் மண்ணில் காணும் வாய்ப்புக் கிடைச்சிருக்கு. அதுவும் உங்கள் பக்கத்து வீட்டுப் பெடியோ இல்லை, அடுத்த ஒழுங்கை குமரோ, தங்கள் அறிவுடமையையும் ஆக்கவுடமையையும் ஒருங்கே காட்டும் ஒரு போட்டி. உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக நீங்கள் இதுவரை கண்டிராத இலங்கையின் தலை சிறந்த மூன்று தனியார் தகவல் தொழில் நுட்ப கம்பனிகள் (Virtusa, WSO2, and hSenid) முதன் முறையாக ஒன்றிணையும் ஒரு மாபெரும் நிகழ்வு -  யாழின் மண்டைக்காய்கான தேடல். (நாமெல்லாம் மொழி பெயர்த்தா இலியட் ஓடிசி கூட 6 page 2 column research paper தான்)

       என்னதான் பண்ணணுவானுகள் ?
ஊரில மண்டை காஞ்சவனுகள் சிலர் சேர்ந்து, மூலை(ளை) முடுக்குகளில் கொம்புட்டார் வைச்சு நோண்டிக் கொண்டோ, விறாந்தில படித்துக் கொண்டு விலாசமா ஒரு கொம்பனிக்கு சீ.ஈ.ஓ கனவு கண்டுகொண்டோ, கணக்கு எண்டால் கணக்கு பண்ணுறதைக் கூட மறந்து விடும் - பேய்க்காய்களுக்கு ஒரு போட்டி - இந்த டிவியில எல்லாம் நடத்துற போட்டிகள் மாதிரி - ரியாலிட்டி ஷோ - "உங்களில் யார் அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ்?" கணக்கா. ஐந்தாறு சுற்று - ஒவ்வொரு சுற்றிலயும் - வடி கட்டி, வடி கட்டி ஒருத்தருக்கு.... 

        என்ன வெள்ளவத்தையில பிளட்சா (flats -  அடுக்கு மாடி மனை) ?

சீ சீ அதிலும் பெரிசா, கம்பனியே வைச்சு தந்தாலும் தருவானுகள் - நாட்டின் பெரிய கொம்பனியில வேலை , இப்படி பல உள் மற்றும் வெளிக் குத்து இருக்கு.

யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மொரட்டுவ போன்ற பல மாவட்டங்களுக்கும் யாழ் ஐரி பஸ் ஒண்டு போய் ரவுண்டு கட்டி வாக்கெடுத்து (ஒரு விளம்பரந்தேன்), சுமார் பதினாலு அணிகள் - பல்கலை கழகங்கள், பிரபல்யமான தனியார் கல்வி அமைப்புகள் எண்டு பலத்தில் இருந்தும் பங்கு கொள்கின்றன. நல்லவேளை நான் பார்டிசிப்பன்ட் இல்லை, இல்லை வண்டவாளம் தண்டவாளம் ஏறி இருக்கும்.

வெண்ட அணியின் அம்மாக்கள் சீலைத் தலைப்பால் வாயை பொத்தி அழுவது, அப்பாக்கள் சியர் கேர்ல்ஸ் மாதிரி உற்சாகப் படுத்துவது, தங்கள் குடும்ப சோகக் கதை சொல்லி எல்லாரையும் நெகிழ வைப்பது, நடுவர்களின் பிறந்த நாளை சர்ப்ரைசா கொண்டாடுறது, வயில்ட் காடு ரவுண்டு, சிறப்பு அதிதிகளா மார்க் சுக்கர்பெர்க், லாரி சோடா மன்னிக்கவும் லாரி பேஜ் போன்றோர் வரலாம் இல்லை அவைய விடப் பெரிசா உள்ளூர் ஆட்டக்காரன் யாரவது வரலாம் (கரகாட்டக்காரன் காலத்திலிருந்து வெளியூர் ஆட்டக்காரனை உள்ளூர் ஆட்டக்காரங்கள் மதிக்குறதில்லையே).இது போன்ற ரியாலிட்டி சோக்கே-ஆன (சோக்கான) அம்சங்கள் எதிர்பார்க்கலாம். (கவிதைக்கு பொய் அழகு)

(ஆமா டிடி வருவாங்களா? சிவகார்த்திகேயன் மாதிரி ஒராள் நடத்த வருது எண்டு சொல்லறாங்களே சயந்தன் உண்மையா ?)  

எது எப்பிடியோ நடுவர்களுக்குள்ளும், பங்குபற்றுபவர்களுக்கும் நடுவர்களுக்கும் இடையிலும் சூடான வாக்கு வாதம் guaranteed! 

கொம்புயூட்டர் போட்டியா? எங்களுக்கு ஒரு இழவும் விளங்காது, போற வயசில, இருக்குற பிரச்னைக்குள்ளையும், வேற வேலை இல்லை எண்டுறவைக்கு,
          ஏதோ கர்நாடக சங்கீதம், சுருதி , இராகம் விளங்கியே பாட்டுக் கேக்குரனியள்? போய்ப் பாருங்கோ விளங்கலாம் இல்லாட்டியும் பரவாயில்லை. சங்கட சதுர்த்திக்கு பிள்ளையார் கோவிலுக்கு சுண்டல் கிடைக்கும், சுரண்டல் குறையும் எண்டே போறனியள் - நம்பிக்கை, அது மாதிரி சும்மா போய்ப் பாருங்கோ.

இனி- பாகம் இரண்டு: காடு திறந்து கிடக்கின்றது.

பி.கு: நண்பர்களே, சும்மா உடான்ஸ் அடிப்பதோடு என் பணி நின்று விடுகிறது - ஆனால் இந்த நிகழ்வுக்காய் சயந்தன், பாலா,  சர்வேஸ் எண்டு ஒரு சிறிய அணி அநியாயத்துக்கு  உழைச்சிருக்கு, ஆதலால் இந்த போஸ்டுக்கு லைக் பண்ணுறது, பின்னூட்டம், ஊக்கசத்து எல்லாம் விட்டுட்டு;   அவைக்கு தேடித் பிடித்து ஒரு வாழ்த்து சொல்லுங்கோ - புண்ணியமாப் போகும். அவைய இங்க பிடிக்கலாம் : https://www.facebook.com/groups/264218806991707/.

புதன், அக்டோபர் 10, 2012

எங்களுக்கே எங்களுக்கு என்று ஒரு....

இது குற்றப்பத்திரிகை அல்ல, பொதுமைப் படுத்தி பிரச்சனையின் இன்னொரு கோணத்தை அலசுவதே நோக்கம் - அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு.
தமிழர் என்றொரு இனம் உண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு  - நாமக்கல் வி. இராமலிங்கம்பிள்ளை
அண்மையில் நண்பன் பாரதி இப்படி ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தான்
இன்று ஒரு தமிழ்க் கடைக்கு போயிருந்தேன். ஒரு சுவரொட்டியில் "மாவீரர் மாதத்தில் களியாட்டத்தை புறக்கணிப்பீர் " என்றும் அதனைத் தொடர்ந்து உணர்ச்சிப் பிராவகமாய் ஒரு கட்டுரையும் இருந்தது.
சத்தியமா முழுவதும் வாசிக்கலீங். அதற்குள்ளாகவே அம்மா " உதை எதுக்கு வாசிக்கிறாய்?.... உனக்கென்ன லூசா?? வந்த வேலையை கவனி என்று சத்தம் போட்டார்கள்.
நானும் அம்மா கேட்ட முதல் கேள்விக்கு பதில் சொல்லாமல் ( இருந்தால் தானே சொல்ல.. :) ) "லூசில்லை" என்பதை கூட அழுத்தமில்லாமல் ( எல்லாம் ஒரு சந்தேகந்தான் :) ) சொல்லிவிட்டு வந்த வேலையை கவனித்தேன்.
ஆனாலும் அந்த சுவரொட்டியில் பெரிய எழுத்துருவில் இருந்த "அடங்க மறு" , "திருப்பி அடி" ஆகிய இரு சுலோகங்கள் எனக்குப் புரியவில்லை.
வாங்கிய பொருள்களுக்குரிய பணத்தை கொடுக்கும்போது கடைக்காரரிடம் அண்ணை!! நாங்க "ஆருக்கு அடங்க மறுக்கனும்?? ஆருக்கு திருப்பி அடிக்கனும்?? " என்று கேட்டேன். அதற்கு அவர் "நாயகன்" கமல் பாணியில் தெரியலயேப்பா.. என்று விட்டு... பில்லை தந்துவிட்டு நெற்றியை சுருக்கி மூக்குக் கண்ணாடிக்குள்ளால் என்னைப் பார்த்தார். அப்ப பின்னால் நின்ற ஒரு அக்கா தன் புருசனிடம் எந்த சுலோகதுக்கு இந்த தம்பி அர்த்தம் கேட்கிறார் என வினவ புருசன் முகத்தில் கலவரம் :). நானும் பில்லை வாங்கிக் கொண்டு வெளிய வந்தாலும் இன்னுமொரு விசயம் எனக்குப் புரியல..... கடந்த காலங்களில் இருந்து வந்த மாவீரர் வாரம்" எப்போது "மாவீரர் மாதம்" ஆனது??
எந்த அணியாவது வாயை திறங்கப்பா....
சில தினங்களுக்கு முன் ஜேகே யாழ்பாணத்து தொண்ணூறுகளின் கிரிக்கெட் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தார், அதில் இப்படி ஒரு கனவை பதிகிறார் 
 சில நாடுகளின் வீரர்கள் ஆடும் ஆட்டத்தை பார்க்கும்போது கோபம் இன்னமும் எகிறுகிறது. இது காண்டி அண்ணாவின் இடம். டூ டவுணாக வரவேண்டியவன் கௌரி, இந்த பார்ட்னர்ஷிப் போட்டிருக்கவேண்டியவர்கள் கௌரியும் கார்த்திக்கும் என்றெல்லாம் ஒவ்வொருமுறையும் சில இன்டர்நேஷனல் ஆட்டங்களை பார்க்கும் பொது எண்ணம் வருகிறது. கூடவே அடிமனதில் இருந்த கனவுகளும் எகிற, கோபம் இன்னமும் அதிகரிக்கிறது. இது சிறுபிள்ளைத்தனமான சிந்தனை என்று புத்தி கூறுபவர்கள், மீண்டும் இந்த இரண்டு பாகங்களையும் வாசித்துப்பாருங்கள். இது தான் எங்களின் அணிகள். இவர்கள் தான் நாங்கள் கொண்டாடிய வீரர்கள். இது தான் எங்கள் கிரிக்கட்! கிரிக்கட் ஒரு விளையாட்டாய், கிரிக்கட் ஒரு அரசியலாய் .. இதெல்லாமே தாண்டி “என் கிணறு என் கனவு எது சரியோ எது பிழையோ இதுவே நாம்” என்ற கேதாவின் கவிதை போல … இந்த கிரிக்கட் ஒரு தசாப்தத்தின் வாழ்க்கை … எங்களின் வாழ்க்கை! இதுவே நாம்!

இந்த கனவுகள் கொண்டுதான் சிலர் மேலே சொன்ன போராட்டங்கள் நியாயப்படுத்துகிறார்கள், அதனால் இப்படி உணர்ச்சிகளை கிளறாதீர்கள் என்று காட்டம் காட்டும் நண்பர்கள் எனக்கு நிறைய இருக்குறார்கள் (எனக்கு என்று வந்து வாய்க்கிறார்கள்).
இப்படி உணர்ச்சிகளை மீட்டுவதன் மூலம் கொஞ்சம் மனதுக்கு ஆறுதல் கிடைக்கலாம், ஆனால் வாழ்வுக்கு மாற்றம்  ? என்று தர்க்கம் பண்ணுவார்கள் இந்த பண்டிதர்கள் - கவையில்லை, வாழ்வு முழுவதுமே அறிவு மட்டும் கொண்டு வாழ்ந்திட முடியாது என்று இவர்களை மறுப்பார்கள் இன்னொரு சாரார்.

மனிதனை அவன் தேவைகளை கண்டறிவதன் மூலம் உற்சாகப் படுத்தலாம் என்கிறார் மாச்லோ எனும் மனோதத்துவர். இவரது இந்த தேற்றம் இன்றளவும் மனித வள முகாமை கல்விகளில் பிரபல்யம். மனிதனது தேவைகள்:
->பௌதீக தேவைகள்
  -> பாதுகாப்பு
    -> அன்பும் அங்கீகாரமும்
      -> சமுக அந்தஸ்து
        –> சுயமறிதல்
என்ற ஐந்து அடுக்கு மாளிகை என்கிறார் இவர். இந்த வரிசையிலேயே மனிதனது தேவைகள் வளரும் , ஒன்று கிட்டியதும் கொஞ்சக் காலம் அதில் திளைத்து சலித்து மற்றதை தேடும். இந்த ஒவ்வொரு தேவை வகையை மேலும் வகைப்படுத்தலாம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தேவைகள் பெருவாரியாக இந்த 5-கட்டு அமைப்பில் அடங்கிவிடும்.



முல்லைத்தீவில், அதை அண்டிய சின்ன சின்ன சிதிலங்களில்
எஞ்சி இருக்கும் மனிதம் பசித்திருக்கு -
பசித்து மட்டுமே இருக்கு.
பசிக்கிற வயிற்றை தடவிக் கொடுக்க
கைகள் அற்ற கூட்டம் அது-
 எந்த செல்லோ/குண்டோ வெட்டி எறிந்திருக்கும்.
எழுந்து நடந்து வேலை செய்ய கால்கள் அற்ற கூட்டம்.
பசி வந்து பத்தோடு கூட சில பந்துக்களையும் எடுத்துப்போய் இருக்கும். இவர்களது தேவைகள் பௌதீக அளவில் நிற்கின்றன, அதை தாண்டாமல் மற்றைய தேவைகளின் நியாயம்/ இருப்பு புரியாது.

உன்னிகிர்ஷணன் பாடினாலும் படாட்டாலும்,
இளையராஜா இசை அமைத்தாலும் அமைக்காவிட்டாலும்,
சசிக்குமார் படம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும்,
வெறு வயிறு  -
    ஏவறை கூட வருவதற்கு ஏதும் சுரக்க வழி இல்லா வயிறுகளுக்கு,
எகிப்தின் பருத்திப் புரட்சியும், அமெரிக்க ஏகாதிபத்தியமும்,
எரிந்த நூலகமும் – ஊகும் கவையில்லை.
கிரிக்கெட் நடந்தாலும் நடக்காவிட்டாலும், அதில் நம்மாள் இருந்தாலும் இருக்காட்டியும் - ஊகும்.
------------------------------------------------------

யாழ்ப்பாணம், அதன் சுற்று வட்டாரம், மட்டக்கிளப்பு திருகோணமலை நகரங்களிலும் - பௌதீக தேவைகள் கொஞ்சமாய் எண்டாலும் பூர்த்தி ஆன மனிதர்கள். வெளியே நடப்பது தெரிய முயல்கிறார்கள். வீட்டுக்குள் அங்கீகாரம் தேட ஏதாவது செய்து நிரூபிக்க விரும்பலாம். பெரும்பாலும் பௌதீக தேவைகளை மேன்மைப் படுத்தும் முயற்சியும் அதன் வழி அன்பையும் அங்கீகாரத்தையும் அடைய முயல்கிறார்கள் - இவர்களுக்கு உன்னிகிர்ஷ்ணன் பாடுவதை எப்பவாவது கேட்டுப் பார்க்கலாம் என்று ஆர்வம் இருக்கும் பட்ஜெட் உதைக்கும். இரண்டுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டு எப்படியாவது பெடி கம்பஸ் போய் மேல வந்திடலாம் என்று நேர்த்தி வைச்சுக் கொண்டிருக்கும். 
------------------------------------------------------
கொழும்பும், மேற் சொன்ன நகரங்களில் ஆங்காங்கும் - அந்தஸ்தை நிரூபிக்க அலைமோதும் மக்களைக் காணலாம். இந்துமா மன்றம், ரோட்டறிக் கழகம், கம்பன் கழகம், தமிழ்ச் சங்கம், பழைய மாணவர் சங்கம் இன்ன பிற தொண்டு மற்றும் சமூக அமைப்புகள் வழி தங்களுக்கான சமூக அந்தஸ்தை தேடிக் கொண்டிருக்கும் இன்னொரு படி நிலை மக்கள்.
   இவர்களுக்கு உன்னி பாடினால் நல்லது என்று தோன்றும் - இல்லை அது தேவை அற்றது என்றும் தோன்றும். இரண்டாகப் பிரிந்து நின்று வாதித்து, ஸ்டேடஸ் போட்டு, கொமெண்ட் பண்ணி, லைக் பண்ணி தங்கள் சமூக அடையாளத்தை தேடி அல்லது உருவாக்க முயல்வார்கள். இவர்களுக்கு உரிமையும் உணர்வும் ஒரு தலையாய பிரச்சனை. அதில் நிலைப்பாடுகள் வேறுபடலாம். 
------------------------------------------------------
வெளிநாடுகளில் தங்கி விட்டவர்கள், அவர்கள் அனுப்பும் ரூபாயில்லாத காசில் வாழும் மனிதர்களும் இந்த சமூக அந்தஸ்து தேவை படிநிலையில் இருப்பார்கள். ஆனால் வெளிநாடுகளில் தங்கி விட்டவர்கள் ஒரு தனி வகை - காரணம் அவர்கள் அந்த ஊரிலும் இந்த ஊரிலும் என இரண்டு இடத்திலும் சமூக அந்தஸ்தை தேடுவார்கள் - அதற்கான தேவை அடுத்த சந்ததி வரை தொடரும் அதற்கப்பால் என்பது பற்றி இவர்களுக்கு இருக்குற பயம் கேள்வி - புலி வால் பிடித்த மாதிரி - துரத்திக் கொண்டே இருக்கும் / இழுத்துக்கொண்டே இருக்கும்.
  கவிதை எழுதுவர், ஒபாமாவுக்கு பெட்டிசன் போடுவர், ஊருக்கு கோபுரம் திருத்துவார், ஊரில் வீட்டுக்கு கூரை திருத்தி western bathroom கட்டுவர், உனது நாடு எது என்ற கேள்விக்கு இலங்கை என்று சொல்லவும் மனம் இவர்க்கு ஒப்பா, இங்கிலாந்து என்று சொன்னால் கேட்பவன் ஒப்பான், - குறைந்தது இதற்காவது தனி ஈழம் அவசியமாகிறது இவர்க்கு.
  சீமானை பேச அழைப்பர் தாமரையை (கவிதை) பாட அழைப்பர் - இன்னும் பலர் வந்து போவர் - ஊரில் போய் படாதீங்கோ – கப்பில் (GAP) உடுப்பு வேண்டாதீங்கோ என்டுவர் - இதெல்லாம் பயனில்லை என்று ஒரு கிளை தத்துவம் வரும், இன்னமும் இது கிளைக்கும் ஒரே நோக்கத்திற்க்காய் வேறு வேறாய் வழி தேடும் / காட்டும் - அதன் வழி தனக்கு ஒரு அங்கீகாரம் தேடும்.
------------------------------------------------------
கடைசிப் படிநிலை தன்னை உணருதல், கொஞ்சம் ஆன்மீக வகையறா. இது பற்றறுத்தல் என்று கொள்ளலாம் - நிறையப்பேர் இங்கு வரை போவதில்லை – பிரமச்சரியம் –> இல்லறம் –> வானப்பிரஸ்தம் –> துறவறம்  என்ற வாழ்வு முறை இந்த தேவை பரிமாணத்தை புரிந்து அமைக்கப்பட்டது என்று தமிழ் படித்தவர்கள் மேடையில் பேசக் கேட்கலாம்.
------------------------------------------------------
இதே பிரச்னையை, game theory பார்வையிலும் அலசலாம், மேற் சொன்ன players உட்பட வேறு சில players கொண்ட ஒரு சிக்கலான ஆட்டம் தான் எங்கள் இனப்பிரச்சனை. இது பற்றி விரிந்து வாய்ப்புக் கிடைத்தால் எழுத முயல்கிறேன் (draft இலேயே நிறைய நாளாக் கிடக்கு).

மாஸ்கோ சொன்ன கூம்பை கொஞ்சம் எங்கள் நிலைப்பாட்டுக்காய் தத்துவம் மாறாது வளைத்து இருக்குறேன். 

ஒரு பரபரப்பற்ற மழை நாள்





இன்-பொக்ஸ் இன்கிரிமெண்ட் ஆகாத
ஒரு பரபரப்பற்ற நாள்

எந்த 'இழவுக்கோ'
வானம் கருமை பூசிக்கொண்டு
சோம்பி இருந்தது

பின்னேரம் நாலு மணி -
ஆனால் அதிகாலையும் அந்தியும் கலந்து
மிக்சிங் ஒருமாதிரி அம்மல் தந்து

மெல்லிய தலைவலி
கண்கள் பூஞ்சி பூஞ்சி சொக்கிற்று.
பெய்தேன் என்றும் இல்லாமல்
பெய்யவில்லை என்றும் இல்லாமல்
மழை ஒப்புக்கு சப்புக்கு
வானத்தின் துக்கத்தோடு சேர்ந்து கொண்டது

ஒரு கோப்பி சூடா -
நாக்கு சப்புக் கொட்ட முடியாமல்
சொண்டுகள் காய்ந்து போய் இருந்தன

போர்வையின் கணகணப்பை ஒதுக்கி
எழும்பி கோப்பி போட
அலுப்பாய் இருந்தது.

இப்போதெல்லாம்
பரபரப்பற்ற நாட்களில்
சாப்பாடு செமிக்குதில்லை,
கண்கள் அயருதில்லை

இது ஒரு அப்பழுக்கற்ற ஒய்வு நாள்
என்பதை
மனது நம்ப மறுக்குது.

காற்று வீசாமல் பெய்கிற மழை
தேத்தண்ணிக்கு தண்ணி கலந்து தந்த மாதிரி
ஒரு அஜீரணம்.

அந்த பரபரப் பற்ற நாளை
எந்த பரபரப்பும் இல்லாமல்
அனுபவிக்க முடியாமல் போனோமே
என்ற அங்கலாய்பின் பரபரப்பில்
தவித்துக்கொண்டிருந்த மனசு

சோம்பல் முறித்து
நெட்டி முறித்து
எழுந்ததும்
மழை
கொட்டோ கொட்டு என்று கொட்டியது.

திங்கள், செப்டம்பர் 10, 2012

நித்தம் நித்தம் நெல்லு சோறு…

                                                      மொட்டைக் கறுப்பன்
ஹேய் ஒதயா, ஹொவ் டூ வீ ஈட் திஸ் ?


அது ஒரு வெயில் கால சனி மதியம், தெரிந்தவர், தெரிந்தவருக்கு தெரிந்தவர் என்று ஒரு சிறு கூட்டம், பெயர் தெரியாமல் மதமத என்று உயர்ந்து வளர்ந்த ஒரு மரம் , கீழே ஒரு கொட்டில் - அந்த வளாகத்தில் வாழுபவர்களுக்காய், ஒரு நீல நிறத்தில் பூப் போட்ட பிளாஸ்டிக் மேசை விரிப்பு, விதம் விதமாய் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பண்டங்கள், கோக், ஸ்பிரைட், தேசிக்காய் சோடா (லேமேனேட்) மற்றும் மெலிதாக சீவிப் பொரித்த உருளைக்கிழங்கு - சிப்ஸ்.

வெள்ளை நிறத்தில் மல்லிகைப் பூவாய் பூத்து சிரிக்கிற கோதுமைப் புட்டு (ஆல் பெர்பஸ் வீட் மாவில் செய்தது), பொரித்த சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, என்பவற்றை; கடுகு சீரகம், கருவேப்பிலை முறுகலாகப் பொரித்த வெங்காயம் சேர்ந்த தாளித்தோடு பிரட்டி (முக்கிய குறிப்பு நல்லெண்ணெயில் பொரித்தது), இஸ்பானியக் கடையில் வாங்கிய இளந்தேங்காய் உடைத்து திருவிய பூவும் சேர்ந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் மல்லிகைப் பூவாய் பூத்து சிரிக்கிற கோதுமைப் புட்டு, பொரித்த மிளகாய் சம்பல் என்பவற்றோடு சம்பந்தமே இல்லாமல் ரயித்தாவையும் போட்டுக் கொண்டு வந்து “ஹேய் ஒதயா, ஹொவ் டூ வி ஈட் திஸ் ?” என்று கேட்ட காரோலினுக்கு வயது அடுத்த மாதம் இருபத்தி ஆறு ஆகப் போகின்றது என்பது சொல்லாமலே தெரிந்தது.

எண்ட பெயரை மென்று துப்பினதைக் காட்டிலும் புட்டுப் பிரட்டலுக்கு தயிர் – கடுப்பு.

டேய் எங்கடா எழும்பிட்டாய் ?


உரும்பிராய் சிறிச் சித்தப்பாவின், குரல் அத்தனை கனமும் அதிர்வும் கொண்டது, சொல்லை மீறி நகர முடியா வசீகரம் அந்தக் கடினக் குரலுக்குள் இருக்குற கனிவு.

சாப்பிட்டுடன் சித்தப்பா.

பாயாசம் ?

அதை பேணியில விட்டுக் குடிக்குறன்.

விசரா உனக்கு, இலையிலையே விட்டு வடை இல்லை அப்பளம் போட்டு சாப்பிட்டா அது பாயாசம் இல்லை அது xxxxx


சந்தமா ஒரு வசை. கூட சாப்பிட்டுக் கொண்டிருந்த சகலபாடிகள், வயதொத்த உறவுகள் கொல் என்று சிரித்தனர். சித்தப்பாவின் உறுமல் அவை அடக்கம் - வாலைச் சுருட்டிக்கொண்டு இருந்து விட்டேன் - எனக்கு பாயாசமே பிடிக்காது இதில் இலையில வேறையா. குசினி வாசல்ப் படியில் அம்மா தெரிந்தார் - அவர் கண்களில் தெரிந்தது பழிவாங்கும் உணர்ச்சியா இல்லை களிவிரக்கமா செரியா சொல்ல முடியாது.

டேய் ‘பாயாசம்’ எண்டு சொல்லிப்பார் - எவ்வளவு இனிமை; ஆயாசம் போன மாதிரி, மொடுக் எண்டு ‘’ எண்டு சொல்லப் படாது – பாஆஆயாஆஆசம் ஒரு ஆலாபனை மாதிரி - பத்மநாபன் பீபீ வாசிச்ச மாதிரி - இனிமை.
அண்ணி கொஞ்சம் பாயசம் கொண்டாங்கோ, வடையும், இரண்டுமே சூடா” -

சித்தப்பா அம்மாவிடம் சொல்லி விட்டு திரும்பி எங்களை ஒரு நோட்டம் விட்டார். சித்தப்பா ஒரு மூடுக்கு வந்துட்டார் எண்டு அவர் கண்கள் சொன்னது - குனிந்த மர நிழலில் குரு போல.

அது சாந்தினி அக்காவின் சாமத்திய வீடு, இடம் பெயர்ந்திருந்த காலகட்டம், சமையல் பந்தி எல்லாம் நாங்கள் பெடியள் கொஞ்சப்பேர் சித்தப்பா தலைமையில். ஆண் பந்தி மூன்று பெண் பந்தி இரண்டு பரிமாறி இல்லை போட்டு, சாக்கில இலை எடுத்து, கடைசிப் பந்திக்கும் வருற மாதிரி வாழக்காய் பொரியல், அப்பளம் அளவாய் பரிமாறி. இப்ப கடைசியா நாங்கள் ஒரு பத்துப்பேர்.

வெள்ளை போம் பிளேட்டில் வெள்ளை பிளாஸ்டிக் கரண்டிக்கு கீழே ரயித்தாவுக்குப் பக்கத்தில் சோகமாய் தேமே என்றிருந்த புட்டுப் பிரட்டல் வெள்ளித்தட்டிற்க்காய் ஏங்குவது போல் பட்டது. பார்க்கப் பாவமாய் இருந்தது. சம்பல் சிவப்பைப் பார்த்ததும் அது ஸ்பயிசி என்று எண்ணி இருக்கும் கரோலின் - அதான் பாதுகாப்புக்கு எண்டு கொஞ்சம் ரயித்தாவை எடுத்துதிருக்கும் - கோபி அண்ணாவின் ஆட்டுக்கறி சாப்பிட்டால் உறைப்பிலையே சிவந்து செத்துப் போனாலும் போயிடும் அந்த மத்திய அமெரிக்க குளிர் தேசத்து வெளிர் பெண்மை. மூன்று ஷாட் வோட்கா அடிச்ச  பிறகு கூட டான்ஸ் புளோரில் எல்லை தெரிந்த பெண்மை சம்பலிற்கு பயப்பிடிவது சிரிப்பாய் இருந்தது.

திஸ் ரெட் திங் இஸ் கால்ட் சம்பல், மேட் வித் scraped கொகனட். யூ கான் மிக்ஸ் இட் வித் தே யெல்லோ திங்கி கால்ட் புட்டு. யூ டோன்ட் நீட் யோகட். இ மேட் இட் சூட்டபில் போர் யூ - லெஸ் ஸ்பயிசி.

இஸ் இட் லைக் சட்னி ?

அட ஆத்தா இது வேற , உனக்கு எப்படி புரிய வைக்க , சம்திங் லைக் தட் என்று மழுப்புவதை தவிர வேறு வழி இல்லை.


அந்த செவ்வாழைக் குலைக்கு புட்டு சாப்பிட சொல்லிக் குடுக்குறதுக்குள்ள எனக்கு பசி வந்திடும், சாப்பாடின்ட ரிஷிமூலம் நதி மூலம் கேட்டு ஒரு காய் காச்சுடும். எப்படி சொல்வேன் உண்மையை - ஒரு நல்லா மினுக்கின வெள்ளித் தட்டில், புட்டின் பிம்பத்தை பார்த்தபடி, புட்டை சம்பலோட இறுக்கிப் பொத்திப் பிடிச்சு அள்ளி சாப்பிட வேணும் - கோதம்மா புட்டு விக்கும் மறக்காம தண்ணி எடுத்து வைச்சுக் கொண்டு சாப்பிட வேணும். கடைசியா கொஞ்சம் சீனியும் தேங்காப்பூ கூட சேர்த்து பொத்திப் பிடிச்சு அமம்மா தருவா – டேசார்ட்.

திஸ் இஸ் ரியலி நைஸ் , வெரி ஸ்பயிசி - பட் டிலிசியஸ். ஹொவ் டூ யூ மேக் திஸ் ?

அது சொன்னா விடிஞ்சிடும், விட்டுடு தாயே. தக்காளி சோறு ஆசை காட்டி காய் வேட்டி விட்டேன்.

- அடுத்த பந்தியில்-

சனி, செப்டம்பர் 08, 2012

எளியவனாப் பிறந்தாலும்...

அன்புள்ள அண்ணாமாருக்கு வணக்கம்,
தேத்தண்ணி முதல் சாயம்,
இறால்ப் பொரியல் பங்கீடு
இரவுக்கும் பதுக்கப்படும்
வெங்காயப் பொரியல்
போன்ற ஒதுக்கீட்டின் பாரபட்சமும்,

உன் அளவில்லாதவைகள்
எனக்கான அன்பளிப்புகள்
என்ற சலிப்பும்,

எனக்கு உன்மீது
பொறாமை
கொளச்செய்தன - இன்றுவரை.
ஆழ ஒரு ஆதங்கம் – மாற்றில்லை
ஆனால்…..


யாழ்ப்பாணத்தின்
கன தம்பிமாரின்
டீ-90 மோட்டச் சயிக்கிளுக்கும்
சிங்கப்பூர் செயினுக்கும்
லிங்கம் கூல் பாரில்
Birth-day பார்டிக்கும்

வெளியே குளிர் காயும்
அண்ணன்களைக் கண்டபின்னும்
’எளியவனாப் பிறந்தாலும்
இளையவனாப் பிறக்காத’ என்ட
வழக்கு மாறாதது
வழக்காடு மன்றங்கள்
இனி விசாரிக்க வேண்டியது.

என்ன இருந்தாலும்
யாழ்ப்பாணத்தாருக்கு
தம்பி எண்டா தனிப் பாசம்!


அம்மாவின்,
அக்காவின்,
தம்பிகளின்,
தங்கைகளின்,
எல்லார் கவலைகளும்,
அத்தனையும்,
மடுத்தபின்னும்
திறந்தே இருக்கின்றது உந்தன் செவி
திறவாமல் இருக்கிறது உந்தன் வாய்.
எத்தனையோ பாவமன்னிப்புகள்
 - நீ வழங்கி இருக்கிறாய்
எத்தனையோ வழக்குகளில்
 - நீ உடைத்து தீர்ப்பு சொல்லி இருக்குறாய்
உன் பிராது ஏதும்,
உன் அழுகை ஏதும்
தலைவாசல் பஞ்சாயத்துகளில் அரங்கேறியதில்லை
- நான் அறிந்த வரை.

எங்களுக்கெல்லாம்
நீ பாவமே செய்யாத பரமாத்துமா;
விட்டுக் கொடுப்பது உன் பிறவிக்குணம்;
உனக்கு பதில் தெரியாத கேள்விகளோ
நீ தீர்க்க முடியாத சிக்கல்களோ
எனக்கு தெரிந்து இல்லை
உடம்பு மடை திறந்த நாளுக்கு பிறகு கூட
நீயே எங்கள் சுப்பர் ஹீரோ



எனக்கு கூட அவ்வப்போ தோன்றும்
உனக்கு யார் சிவி எழுதியது
உந்தன் ட்ரிப்களுக்கு கைச்செலவுக்கு யார் தந்து பணம் ?
டபிள் நோட் போட யாரிடம் கற்றுக் கொண்டாய் ?
ஆனால் அண்ணாக்கள் எல்லாம்
இதை தம்பிகளுக்கு சொல்லித்தர
தெரிந்து கொண்டே பிறக்கிறார்கள் என்று
சும்மா இருந்து விட்டேன்.

”அண்ணாக்கள் அழுவதில்லை” என்று
அரேபிய தேசத்து ஒட்டகக்காரர்களிடம்
ஒரு வழக்கிருக்காம்,
அழுவதில்லையா?
இல்லை அழத் தெரியாதா ?

உந்தன்
தோற்றுவாய்,
ஆற்றுப்படுக்கை,
பலிபீடம்
என்று எதைப்பற்றியும் கவலையின்றி
கருவறைக்குள் இருத்திவிடுகுறோம்
இல்லை தேரேற்றி விடுகிறோம்.

உந்தன் தோற்றுவாய், எது ?
உனக்கான ஆற்றுப்படுக்கை, என்ன ?
உந்தன் பலிபீடம் எங்கே ?
என்று எதைப்பற்றியும் கவலையின்றி
கருவறைக்குள் இருத்திவிடுகுறோம்
இல்லை தேரேற்றி விடுகிறோம்.
கடைசிவரை
சுண்டல் பற்றிய கனவுகளுடன்
எங்களுக்கு உறக்கம் வருகிறது
கட்டாயம் சுண்டலும்
சில சமயம் அவலும் கிடைக்குறது.

ஆமாம்
இருப்புக்கு வாறதில் சாமிக்கு
அலுப்பேதும் இருக்குமோ?
சண்டீசுவரருக்கு மூண்டு முறை
கைதட்டினாப் போச்சு.

வில்லங்கம் பண்ண மாட்டியள் – எண்டால்
விகல்ப்பம் இல்லாம ஒண்டு சொல்லுவன்
அண்ணா செய்த புரட்சிக்கும்
தம்பி செய்த புரட்சிக்கும்
வித்தியாசம் இருக்கு பாருங்கோ.

செவ்வாய், ஜூலை 03, 2012

ஆனந்தி பகுதி III

முந்தய பாகம்

காட்சி IV: மந்திராலோசனை, 1985, அதிபர் அலுவலக அறை - பரியோவான் கல்லூரி.

அதிபர் ஆனந்தராஜா
சேர் பேசாம விட்டுடுங்கோ,

அதெப்படி சேர் இன்விடேஷன் லெட்டர் வந்திருக்கு, ப்ரோப்பேர் ரிப்ளை அனுப்ப வேணும்.

ஆனா அதுக்கு ஆமிக் காரங்களோட, வேணாம் சேர்.

ஏன் சேர் வேணாம், இட் இஸ் ஜஸ்ட் கிரிக்கெட், வாட் இஸ் ராங் இன் இட் ?

இல்லை சேர் இப்ப எக்ஸாம் வருது….

அதிபர் ஆனந்தராஜா தன் நாற்காலியில் பின்னே சாய்ந்து கொண்டார், அந்த வயதான உதவி அதிபரை கூர்ந்து பார்த்துக் கொண்டே சொன்னார், சனிக் கிழமை விளையாடக் கேட்டிருக்கு, மோர் ஓவர் கிரிக்கெட் ஹாஸ் நத்திங் டு டூ வித் எக்ஸாம்.

உதவி அதிபருக்கு எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்ற வேகம், எதோ ஒரு ஆபத்தை உணர்த்த இடது கண் துடித்துக் கொண்டிருந்தது - அவரை அது மேலும் படபடப்பாக்கியது.

மற்றயவர்கள் இதில் பேசிப் பயனில்லை என்பது போல் அமைதி காத்தார்கள்.

இந்த நேரத்திலை இது வேணாம் சேர் அடுத்த டேர்ம் வைச்சுக் கொள்ளலாம்.

கேட்ட திகதியில இருந்து இரண்டு மாசம் கழிச்சு எண்டா நல்ல இருக்காதே சேர்.

அந்த உப அதிபருக்கு இந்தக் காரணங்கள் எடு படாது என்று புரிந்திருந்தது, ஆனால் ஏதாவது ஒரு காரணத்தில அதிபரை ஒப்புக்கொள்ள வைக்க வேணும் எண்டு போராடினார்.

வேறு வழியில்லை உடைத்துப் பேச வேண்டியதுதான்,

சேர், இங்க இப்ப நிலைமை செரி இல்லை, இயக்கங்கள் பல இருக்கு அவனுகள் ஆமிக்காரனுகள் போலீச எண்டு அங்கங்கை சொறியுரானுகள், எதுக்கு வீண் பிரச்சனை.

ஆனா இது வெறும் கேம் தானே சேர், எங்களை எங்கட சனத்துக்கு நல்லத் தெரியும், ஜே.ஆர் கல்வித்திட்டத்துக்கு எதிராக் குரல் கொடுத்தது, கொழும்பில இருந்து சனம் அடிவாங்கி ஓடி வரேக்கை உதவினது எண்டு எங்கட ஸ்டாண்ட் என்ன என்பதில் ஒரு குழப்பமும் இல்லையே.

இனி வேற வழி இல்லை, கடைசி ஆயுதத்தை கையில் எடுத்தார் உபஅதிபர்.

சேர் உங்கட டிசிசன் மொத்த JHONIONS மேல ஒரு பிம்பத்தை உருவாக்கும். யோசியுங்கோ சேர், அவசரப் பட வேணாம்.

அதிபர் ஆனந்தராஜா இந்தப் பதிலால் எந்த சலனமும் அடையவில்லை, அந்த அறயில் இருந்த ஏனயவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சி, இப்படி ஒரு போட்டை உப-அதிபர் போடுவார் எண்டு அவை எதிர் பார்க்கவில்லை.

தன முன் வழுக்கை தடவிக்கொண்டு ஒரு புன்னைகையோடு அதிபர் ஆனந்தராஜா சொன்ன வார்த்தைகள்,

“Johnians! Always play the game.”



முற்று வைக்கப்பட்டது.

முந்தய பாகம்

அதிபர் C.E. ஆனந்தராஜா பரியோவான் கல்லூரியின் மறக்க முடியாத குறிப்பிடத்தக்க அதிபர், யாழ்ப்பாணத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமை மிக்க கல்வியாளர். இலங்கை இராணுவத்துடன் கல்லூரி அணி ஒரு கிரிக்கட் போட்டி விளையாட ஒப்புக் கொண்டதால் அவர் கொல்லப்பட்டார். இந்த ஜூன் மாதம் இருபத்தி ஆறாம் திகதி அவரது இருபத்திஏழம் வருட நினைவு நாள். என் செவி வழி செய்திகளை கொண்டும் இணைய உசாத்துணைகளைக் கொண்டும் இந்தக் கதையை சிருஸ்டித்துள்ளேன், தரவுகளில் ஏதும் பிழை இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் - இது என் நினைவு தெரியாத காலத்து நிகழ்வு.

குறிப்பு: Johnians என்பது பரியோவான் கல்லூரி மாணவர்களை குறிக்கும்; பரியோவான் கல்லூரி கீதத்திலே இந்த வரிகள் வருகின்றன,
Your Alma Mater's ancient name,  
Johnians !Always play the game


உசாத்துணைகள்:

ஆனந்தி பகுதி II

முந்தய பாகம்.

காட்சி – III மன மாற்றம் – 85 ம் ஆண்டு பரியோவான் கல்லூரி விளையாட்டுப் போட்டி.

அன்றைக்கு விளையாட்டுப் போட்டிக்கு போறது பற்றி கலவையான உணர்வுகளுடன் சப்பாத்தை முடிச்சுப் போட்டுக்கொண்டு இருந்த சிறுவன் இந்தக் கதையை இணைக்கிற மையப் புள்ளி. நீல நிறத்தில் ஒரு கறா காற்சட்டை மஞ்சள் டீ-சேர்ட் கருப்பு சப்பாத்து. ஒல்லியான உடல்வாகு கொஞ்சம் ஒட்டினார்போன்ற கன்னங்கள் ஆனால் அந்தப் பையனிடம் எதோ இருக்கு என்பதை அவன் சுருங்குகின்ற நெற்றியும் விரிகின்ற கண்களும் காட்டிக் கொடுத்தன.

அம்மா கெரிஎண்டு வெளிக்குடுங்கோ அண்ணா ஓட முதல் போக வேணும்.

சிரித்துக்கொண்டே அம்மா அவன் தலையை கோதிக் கொண்டு செரி வா என்று கை பிடித்து அழைத்து செல்கின்றாள்.

அண்மையில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கும் பில்லா படம் அந்தச் சிறுவனுக்கு நிறையவே பிடித்துப் போயிற்று. அவனுக்கு மிகவும் பிடித்த ரஜனிக்காந்த் நடித்த என்ற ஒன்று மட்டுமா இல்லை வேறு காரணங்கள் உண்டா என்பது இந்தக் கதைக்கு அவளவு முக்கியமில்லை. அனால் அந்தப் படத்தில் வரும் “மை நேம் இஸ் பில்லா…” பாடல் அவனின் தற்போதைய முணுமுணுப்பு பாடல் ஆகி இருந்தது வாசகர்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். வழி நெடுக அதை பாடிக்கொண்டு எதிர்க் காற்றை தன் முடிக் கற்றைகளால் அனுபவித்துக்கொண்டு வந்தான் அந்த சிறுவன்.

அம்மா இன்னும் எவளவு தூரம் ?

கிட்டத்தான் வந்திடும்.

அங்க ஐஸ் பழம் விப்பினாமா ? எனக்கு கட்டாயம் வாங்கித் தரவேணும்.

அதெல்லாம் கூடாது என்ன தண்ணியில செயுறானுகளோ….

ஏமாற்றத்தை காட்டாது முகத்தை திருப்பிக்கொண்டு எதிரே ஓடும் தந்திக் கம்பங்களை வேறிக்குறான்…

இதுதான் அவன் பரியோவான் கல்லூரிக்கு போவது முதல் முறை. அதுவரை யாழ் இந்துக்கல்லூரிக்கு கிரிக்கெட் பார்க்க போயிருக்குறான். அல்லது யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி நடக்கும் போது அந்த மைதானத்துக்கு போயிருக்குறான். தன் தந்தை படித்த பள்ளிக்கூடம் என்பதால் யாழ் இந்து மீது ஒரு அபிமானம் உண்டு, அங்கு தன் மேற் படிப்பை கொள்ளலாம் எண்டு ஒரு எண்ணம அவனிடம் இருந்தது, அனால் அண்ணாக்கள் படிக்கும் பரியோவான் கல்லூரி இதுவே முதன் முறை பார்க்கப் போகிறான்.



ஒருவழியாக கல்லூரியை வந்தடைந்தது பேரூந்து, வெளி இருந்து பார்த்தால் கல்லூரியின் உட் கட்டமைப்பை புரிந்து கொள்ள முடியாது, அது அவன் ஆர்வத்தை அதிகரித்து. தாயின் கைகளை பிடித்து தரதர இழுத்துக்கொண்டு உள்ளே நுழைகிறான்.

இருக்கைகள் அற்ற யாழ் இந்து மைதானத்திற்க்கும் இந்த மைதானத்திற்க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பெரிய படியமைப்பில் பவலியனும் அதற்கு குடை பிடிக்கும் மகோகனிகளும், பாக் ட்ரோப்பில் ஓல்ட் பார்க்கும், இடது புறம் ஒரே அளவில் உயர்ந்து வளர்ந்து நின்ற பெயர் தெரியாத இளம் பச்சை நிற மரங்களும், அழகாக வெட்டப் பட்ட சவுக்கு மர, குறோட்டன் அலங்காரங்களுடனான பாதை வழியும் எல்லாமே புதுசு. பெற்றோர் பழைய மாணவர்கள் இருக்க நீண்ட நீல நிற ஒயில் பெயின்ட் மரக் கதிரைகள் போட்டிருந்தார்கள். அதில் ஒரு கரையாக தாயும் மகனும் அமர்ந்து கொண்டார்கள் - பின்னால் இருந்த அந்த பழைய மண்டபம் அவனை அடிக்கடி திரும்பிப் பார்க்க வைத்தது.



மைதானத்தின் எதிர்க் கோடியில் அளவாக இருந்த ஒரு வீட்டைக் காட்டி, அதுதான் பிரின்சிப்பல் பங்களோ என்று அறிமுகப்படுத்தினார் அவன் தாயார். சினிமாவில் பார்த்த பங்களோகளினால் அதனை அவன் பங்களோ  என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கல்லூரிக் கொடி அதன் பின்னால் எல்லா இல்ல கொடிகளும் பறக்கத் தாயாராய் இருந்தன.

அம்மா பெரியண்ண எந்த ஹவுஸ் ?

“ஜோன்சன்”

சின்னண்ணா ?

சகோதரங்கள் எல்லாம் ஒரே ஹவுஸ் தானடா…

அப்பா நான் சேர்ந்தால் நானும் ஜோன்சன் ஹவுசா ?

அம்மா சிரித்துக் கொண்டே ஆமோதித்தார்.

திடீரெண்டு மைதானம் அமைதி கொண்டது, பிறகு ஒரே தாள கதியில் எல்லோரும் கை தட்டினார்கள். அவன் எழுந்து நின்று கொண்டான் - பிரின்சிப்பல் பங்களோவில் இருந்து ஒரு சில தலைகள் நகர்வது தெரிந்தது – மெதுவாக அவர்கள் உருவம் செரியாகப் புலப் பட்டது. நடுவில் அதிபர் ஆனந்தராஜா அருகில் பிரதம விருந்தினர், விளையாட்டுப் பொறுப்பாசிரியர், அத்தலட்டிக் காப்டன் மற்றும் சிலர். கை தட்டலுக்கு இசைவாய் அவர்கள் நடந்து வந்தது இவனுக்கு பிரமிப்பு ஊட்டியது - குறிப்பாய் கூட் சூட்டுடன் மிடுக்காய் கை தட்டல் தாள கதிக்கு இணங்க நடந்து வரும் அதிபர் அவன் மனம் முழுதும் வியாகபித்தார். அவன் வாய் அவனை அறியாமல் முணுமுணுத்தது - "மை நேம் இஸ் பில்லா...". அந்தத்தருணம் அவன் ஒப்புக் கொண்டான் அந்த வீடு பங்களோ தான்.

அம்மா நானும் அண்ணாவயோட படிக்கப் போறன்.

அவன் தலையை கோதிவிட்டுக் கொண்டே தாயும் புன்னகையால் ஆமோதித்தாள்.

அடுத்த பாகத்தில் முற்றும்.

செவ்வாய், ஜூன் 26, 2012

வெறுங்கனவும் வெறுவாயும்


அண்மையில் நண்பன் இல்லை கவிஞ்ஞன் மானுடன் (கேதா) இளவேனில் சஞ்சிகைக்காக எழுதிய கவிதை வாசிக்கும் ‘அனுபவம்’ கிட்டியது. கவிதையை அதன் ரசனைக்கேற்ப தெரிந்த சில நண்பர்களுக்கு பகிர்ந்தேன். கேதாவுக்கு நட்பு கருதி ஒரு வட்டத்துக்குள் என உணர்வுகளை சில வார்த்தைகளில் பகிர்ந்து நிறுத்திக் கொண்டேன். ஆனால் இந்தக் கவிதைக்கு முகநூலில் பின்னூட்டியவர்கள் பினைந்த பினையில் ஒரு பிசிராந்தையார் பாதுகாக்கப்பட வேண்டி இந்தச் சோழன் எழுதிக்கொள்வது.

கவிதை என்ற பெயரில் என்னை வந்து சேரும் ‘க’ ‘வி’ ‘தை’ எல்லாம் ஒருங்கே சேர்த்து வாசித்தாலும் கவிதை என்று ஆவதில்லை. சில நல்ல கவிதைகள் மனதுள் எங்கோ ஒரு மூலையில் கல்லைப் புரட்டிப்போடும் இன்னும் சில மனதையே புரட்டிப்போடும். கவிதை ஒரு கால எந்திரம் அதில் ஏறி முன்னும் பின்னும் எங்கும் பயணிக்கலாம், இறந்து போன தருணங்கள், நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணங்கள், இன் வர இருப்பது, வந்தால் நலம் என நினைப்பது இப்படிப் பல. இந்தக் கவிதை யந்திரம் கொண்டு காலப் பரிமாணம் மட்டுமல்ல வெளிப்பரிமாணம் மட்டுமல்ல மூன்றாவதாய் கவிஞ்ஞன் கோர்க்கும் கற்பனைகள் அழைத்து செல்லும் பரிமாணம் இன்னதென்று பெயர் சொல்ல முடியா ஒரு பரிமாணம்: பேசாப் பொருளை பேச முடிவது கவிதைக்கு மட்டுமே சாத்தியம், அல்லது கவிதை மாதிரி படைக்கப் படும் பிற கலைப் படைப்புகளுக்கு மட்டுமே.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எண்ணிலடங்கா தருணங்கள் புதைந்திருக்கும், இந்தக் கவிதை ஒவ்வொரு இளைஞனையும் தந்தை ஆகப் போற அந்த ‘இனி வரும்’ தேவ தருணத்தை தரிசிக்க அழைத்து செல்லும் அதே வேளை பின்னேயும் இட்டு செல்கிறது - புழுதி படிந்த அந்த தருணங்களில் காற்சட்டையோடு பனைமட்டையில் கிரிக்கெட் ஆடுகிற சிறுவன் அவனுக்கு ரப்பர் பந்து வாங்கித் தந்த முன்வீட்டு சண்முகலிங்கம் பிள்ளையார் பேணியில் நெற்றி பிளந்த கிருபா அண்ணை வரை இது இட்டு செல்கிறது - இரு வழிப் பயணம், ஒரே சமயத்தில் எதி எதிர் திசையில்.

இப்படி பயணிக்க வைக்கிற கவிதை கட்டாயம் சலனம் உருவாக்கும், சில தருணங்கள் கூனிக் குறுகுறுக்க வைக்கும், சில தருணங்கள் நன்றி மறந்தார்ப் போல் உணர வைக்கும், இன்னும் சில பெருமை பீடு தரும், வருந்த வைக்கும் வலி மிகு தருணங்களும் கட்டாயம் உண்டு. இங்கேயே கவிஞ்ஜன் வெற்றி பெற்று விடுகிறான் ஆனால் பாவம் கவிதை எழுதும் வரை கவிஞ்ஞன் ஞானி எழுதி முடித்தபின் அவன் ஒரு குழந்தை கிலுகிலுப்பை, சிறு இனிப்பு, முத்தம், பாராட்டு சீராட்டு என ஏங்கும் சிறு குழந்தை. ஆனால் குறுகுறுக்கும் நெஞ்சம் சமாதானம் தேடும், சும்மா இராது தன் புத்தி கொண்டு தன் தரப்பை மெய்ப்பிக்க ஆரவாரமாய் ஒரு ஆதாரம் சொல்லும் - பாவம் தான் வெற்றி பெறுகிறேன் எனத் தெரியாமல் கவிஞ்ஞன் சிணுங்கத் தொடங்குறான். வேறு சில மனங்கள் குறுகுறுப்பை ஒப்புக் கொள்ளும், அதில் சில பாவ மன்னிப்பே பரிகாரம் என்று மறந்தும் போகும், சில  இரண்டுக்கும் நடுவில் நின்று மயங்கும் - கூழும் வேணும் மீசையும் வேணும் என்ன செய்ய என்று தயங்கும்.

இராச்சியங்கள் வாங்கித்தரத் தெரிந்த சீத்தலை சாத்தனார்களுக்கு ஊரில் ‘இராசியில்லா ஒரு இராஜகுமாரன்’ என்று இளக்காரம் இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் எங்கிருந்தோ ஒரு நண்பன் ஆழப் பயணிப்பான் இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் தாண்டி மூன்றாம் பரிணாமத்தில் அபிமன்யுக்கான கீதைகளை கண்டு சொல்வான், கருத்துகளால் உன்னை வடிவைமைப்பதே என் தொழில் என்று காசேதும் பாராமல் கண்ணியமாய் சொல்லுவன். என்ன சொல்ல குறும்புக்காரனொருவன் புரியாத கடுப்பினிலே இது வேறேதோ அடிகோலல் என கும்மி அடிப்பான். கவிஞ்ஞர்களை கண்டு கொள்ளாத தேசம் களை இழக்கும் என்று யாரும் அவனுக்கு சொன்னதில்லை. என்ன செய்ய இலயானுக்கு ஆறுகாலா எட்டுக் காலா என்று தெரியாத ‘சொறியனிடம்’ புரியாமல் படித்த மக்காள் ஏரோப்பிளேன் ஓடின எருமைக்கு இரண்டு வாலாம்  எண்டு கதை அளக்க தவறுவதில்லை.
போய் முடிவான் எனத்தெரிந்தும் போர்க்களத்தில் புகுத்திவிட நானொன்றும் பார்த்தனில்லை” என்று தன் வீரியம் மிக்க அறிவுக்கும் கோரமான யதார்த்தத்திற்கும் நடுவில் திரிசங்கு சொர்க்கமென அந்தராடுகையை – கையாலத்தனமா, கையிலை காணமுதல் எனக்கு அது கைவருமா என்று ஒரு சாதா தகப்பன் தனக்குள் அழுவது சீரியலுக்குள் செண்டிமன்ட் தேடும் சாரிகளுக்கு விளங்க வாய்ப்பில்லை.

இதைச் சொன்னால் என்ன நினைப்பார்கள், தன்னைப் பழசென்று பகிடி பண்ணி தலைமுறை இடைவெளி கொஞ்சம் தள்ளி இரு என்பார்களோ என்று கவிஞ்ஞன் கரைந்துள்ளான். விம்மல் கேட்கிறது. தன் கனவை புரியாது செரி என்றும் பிழை என்றும் தகிக்க வைக்கும் மனிதருக்காய் பயந்து தன் வழி போகவிடுங்கள் என்று கேட்கிறான்

“என்கிணறு என் கனவு எது சரியோ எது பிழையோ”
அப்புறம் இதுக்கெல்லாம் அலட்டாமல் “இதுதான் நான்” என்கின்றான்.
கொஞ்சம் ஆசையாய் தன்னைப்போல் இன்னொருவனை தேடி எதுவோ நீ என்கின்றான்.

ஒரு தகப்பனின் நியாயமான ஆசை, மெதுவாக நிராசை ஆகிவிடும் என்று புரிகிறது - பயம் கவ்வி பற்களால் இதயம் காயம் ஆகி இரத்தம் வடிகிறது, எதுக்கும் வழி இன்றி நிற்கையிலே அக்கறைக்கு இக்கரையே பச்சை என்றார் – போடாங்…… அப்ப சொந்தக் கரையிலேயே சொகமா இருந்திருக்கலாமே ஊரில் சில காய்ஞ்ச இலைகளின் கண்ணீர் துடைத்த படி. - அட இதுக்குத்தான் வந்தமென்று இறுமாப்பும் இல்லாமல், எதுக்குத்தான் வந்தம் என்ற எதுவும் தெரியாமல், இருப்பார் ஒருபுறம் அட ஏனோ வந்துவிட்டம் எப்ப பூவாம் என்ற ஏக்கத்தில் பல பேர் வெளிய சொல்லார் அதில் சிலர் - இன்டர் நெட் செரியா இழுக்காது என்று இடைக்காட்டு மழை நனைய மறந்து விட்டோர் மனசாட்சி இது கவிதை.

ஏற்கனவே சொன்னார்ப் போல் பழசு என்பார் மாற்றம் என்பார் முகாலயனின் காலத்து முலாம் பூசுவார், உணர்ச்சிவசப்படும் அபூதிகள் என்பார் - அப்பரின் பேரில் தண்ணீர்ப் பந்தல் வைப்பதிலும் - அந்த உணர்ச்சி வசப்படுதலிலும் ஒரு சுகமிருக்கு. வீட்டில புட்டுத்தான் ஆனா என்ன பய புள்ளைக வேளியில சாப்பிட எண்டா பர்கர் விரும்புதுகள் என்பது மாற்றம், புட்டா, பாரதியா, வாலிபன் கவிதைகளா வாட் டாட் என்பது வலி இது வேறு வலி ஊரில இருந்தாலும் இந்த வலி இருக்கும் ஆனாலும் இந்தளவு வலி இருக்கா. பின்வீட்டுக் கோடியிலே வளந்து நிக்கும் வாழை, அதன் குட்டி யூரியா விருப்பம் எண்டு சொல்லுறது இடைவெளி தலைமுறையால் - பழசு இல்லை ஆழ வேர் விடு எண்டு ஆலோசனை கூறும் – இடைவெளி. ஆனால் பிடிங்கி வைச்ச ஆல்ப்ஸ் பனி  மலைத் தோட்டத்தில் முளை விட்ட வாழை பாதி ஆப்பிள் ஆகி நிப்பது வலி அது உள்ளீடற்ற ‘வெறுங் கனவு’.

திரவியம் தேட, கலை செல்வங்கள் சேர்க்க அட்டுத்திக்கிலும் அலை கடல் கடக்கையில் காண்பது மாற்றம், பெல் பாட்டம் போய் ட்ரவுசர் நேரானது மாற்றம் - இருபதுக்குப் பிறகு மகன் பேசும் தத்துவங்கள் அவன் அணியும் சட்டைகள் இடைவெளி - துரத்தல் தாங்காது தன்னைத்தானே பெயர்த்து எடுத்து …… வேணாம் இது சொல்லால் புரிவதில்லை. எங்கோ ஒரு தொலைவில் ஒரு வாசகன் மனதில் கற்கள் உருளும் என்ற நம்பிக்கையில், தேனுக்காக பறந்து போகும் ஒரு வண்ணத்துப்பூச்சி வாசிக்கும் என்ற நம்பிக்கையில் காற்றின் தீராத பக்கங்களில் தன் க(வி)தையை எழுதி செல்கிறது இந்த இறகு.

அந்தக் கவிதை: இங்கே 

ஞாயிறு, ஜூன் 24, 2012

ஆனந்தி பகுதி I

Johnians! Always play the game.


காட்சி I: ஒற்றைப் பனை, செம்மணி வீதி 1982.

செம்மணி ரோட்டில் பயணித்துக்கொண்டிருந்த அந்த இரண்டு சைக்கிளும் மோன பாஷையும், மௌன பாஷையும் பேசிக்கொண்டிருந்தன. தூர ஏதாவது சயிக்கிளை கண்டதும், ஒன்று முன்னும் மற்றது பின்னும் என விலகுவதும் பின் நெருங்குவதுமாய் ஒரு நாடகம் ஒத்திகை பார்க்கப்பட்டது - யாரும் அறியாமல். பள்ளங்களில் விழுகிற போது கலகலத்தும் மீள மேடேறும் போது சிணுங்கியும் பரிபாசை பேசின. அந்த ரலி ஆண் சயிக்கில் லுமாலா பெண் சயிக்கிளிடம் அவ்வப்போ நெருங்கவும் லுமாலா அகப்படுவது போல் போக்கு காட்டி சட்டென்று விலகுவதும் எந்த சலிப்பும் இன்றி தொடர்ந்தது. கலகல என சிரித்தால் மாதிரி அதன் பெல் சத்தம் ரலியை மீள மீள வம்புக்கு இழுத்தது. உப்புக் காற்றின் வாசம் ஊர் நெருக்கத்தை உணர்த்தியதும் மெதுவாக அடங்கியது அந்த சலம்பல்.
என்னை ஏன் உனக்குப் பிடிக்கும் ?
பிரேக் கம்பிகளை அழுத்திய வாறே தோள்களைக் குலிக்கிக் கொண்டு சொன்னான்.
பச், தெரியேல்லை பிடிக்கும், அனா நிறைய.
ஊகும் காரணம் சொல்லு ? ஏன் ?
சயிக்கில் இன்னமும் வேகம் குறைந்தது. ஆழ மூச்சு விட்டன், அவளால் சூடு உணர முடிந்தது.
உன் பெயர்தான் காரணம், ஆனந்தி. ஆனந்தி எத்தனை அழகான ரம்மியமான பெயர். எல்லாக் காதலனுக்கும் அவன் காதலியின் பெயர் கவிதைதான் ஆனால் சிலருக்குத்தான் உண்மைப் பெயரே கவிதையாய் இருக்கும்.
அவள் உம் என்று முகத்தை வைத்துக் கொண்டாள்.
இவன் கலகல எனச் சிரித்துக்கொண்டே சொன்னான்.
எனக்கு எங்கட பிரின்சிப்பலைப் பிடிக்கும், அவர் பட்டப் பெயர் ஆனந்தி, அதால அந்தப் பெயரில ஒரு ஈடுபாடு. உன் பெயரும் ஆனந்தியாகப் போனதால் உன்னையும் பிடிக்கும் மேலும் ……….
அவள் முகம் சிவந்து வேட்கினாள், அவன் மேலும் என்று சொன்ன காரணம் அப்படிப் பட்டது.

நூறாவது முறையாக அந்தக் கேள்வி, அதற்க்கு பதில் சொல்லி முடிக்க அவனும் அவளும் பிரிகிற பனை வளவு வந்தது. அது ஒரு கல்லு ரோடு, அவளின் மனத்துடிப்பை புரிந்துகொண்டு லுமாலாவின் கறள் பிடித்த மட்காட் சடசட என சத்தேமேழுப்பியது. அந்த ஒழுங்கை முடுக்கில் ஒரு பனை இதை சட்டை செய்யாமல் தேமே என்று ஓங்கி வளர்ந்து நின்றது.
சில மாதங்களுக்கு முன்னர் …………

காட்சி II: 1982 வடக்கின் பெரும்போர்! யாழ் மத்திய கல்லூரி மைதானம்.



ஏறத்தாள ஒருவருடத்துக்கு முன்னர் எரிந்து அணையாத நூலகம், முனியப்பர், கோட்டை, பண்ணைக்கடல், எல்லாம் வெறித்துப் போய் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் ‘மத்தி’யில் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைந்திருந்த மனிதர்களின் முழுக் கவனத்தையும் உள்வாங்கி அந்த அராவரத்தை விழுங்கி நின்ற இரண்டு இளைஞ்ஞர்களில் ஒருவனைத் தான் கடந்த காட்சியில் சந்தித்தீர்கள்.
சில மணி நேரங்களுக்கு முன்னர்……..

அது ஒரு ஞாயிறு நண்பகல், சில பந்துகளுக்கு முன்னர்தான் பரியோவானின் நபிக்கை நட்ச்சத்திரமான ஒப்பிநிங் பட்ச்மனும் ஆட்டமிழந்து விட்டதால் மத்திய கல்லூரிக்கு வாய்ப்புகள் இன்னமும் பிரகாசமாகி விட்டது. எஞ்சி இருக்கும் பந்து வீச்சாளர்களையும், நம்பத்தக்க கல்லூரியின் டி.எஸ்.பீயும் மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி இறுதி செசனை சமாளிப்பது என்று வீரர்களும் கோச்சும் சில முக்கிய ஆசிரியர்களும், குறிப்பிடத்தக்க பழைய மாணவர்களும் ஆளுக்கொரு அபிப்பிராயத்தை சொல்லிக்கொண்டு இருந்தனர், வீரர்களுக்கான அறை களை இழந்து இருந்தது. எல்லார் முகத்திலும் கேள்விக்குறி. பிக் மேட்ச் மதிய உணவு விசேசம், பல்வகை பறப்பும் நடப்பும் சுட்டும் வறுத்தும் படைத்திருப்பார். இளம் பெடியள் நேற்று கூட மிக ஆர்வமாய் இருந்தனர், இன்று தோல்வி பயம் கவ்விக் கொள்ள உணவுக்கு செல்லும் ஆர்வமுமில்லை. ஏற்கனவே ஆட்டமிழந்து வந்து விட்டவர்கள் குற்ற உணர்ச்சியை அந்த அறையின் அமைதி இன்னமும் அதிகரித்தது. இயலாமையும் தன் மீதான வெறுப்பும் மிக ஒப்பிநிங் பட்ச்மன் பட்டை பல்லை நெருமியவாறு நிலத்தில் குத்திக்கொண்டு இருந்தார்.

வெளியில் ஒருகும்பல் கத்தத் தொடங்கியது "பாசே பசில வடே பரியோவான்…." அதற்க்கு மேல் அவர்களுக்கு கேட்க்க இஷ்டமில்லை.

உதவி தலைமை ஆசிரியர் வந்து நேரம் போகுது சாப்பிட வரச்சொன்னார், சாதரனமாயே கொஞ்சம் குத்தலாப் பேசும் அவர் இன்னமும் ஏதும் சொள்ளமுதல் வேண்டா வெறுப்பா எல்லாரும் சாப்பிட போனார்கள். விரைந்து உணவை முடித்துக் கொண்டு அதிகம் ஆருடனும் பேசாமல் மீண்டும் வீரர் அறைக்கு வந்து விட்டார்கள். அடுத்து ஆட வேண்டிய இருவரும் பாட் அணிந்து தயாராயினர். அப்ப அறைக்குள் நுழைந்த ஆளுமைக்கு பெயர் ஆனந்தராஜா - கண்ணாடி முன்வளுக்கை அமைதியும் ஆழமும் கொண்ட கண்கள். ஆட்களுடன் அறையும் எழுந்து நின்றது. என்ன சொல்லப் போகிறார் எதற்கு இங்கு வந்திருக்குறார்.

come-on guys cheer up…. we can still do it….. some people come to the filed to win, some people come for losing… but we – Johnians! Always play the game..

அறையின் எல்லா சுவர்களிலும் பட்டுத்தெறித்த அந்த வார்த்தைகள் மீண்டும் கூடத்தில் வந்து விழுந்து பரந்தது, எந்த ஒன்று அங்கு இவளவு நேரமும் இல்லாமல் இருந்தததோ அதை யாரோ குடம் குடமாய் கொணர்ந்து கொட்டினாற்ப் போல் இருந்தது. அடுத்து ஆடத்தயாரான வீரர்களில் ஒருவரான கல்லூரியின் டிஎஸ்பி கைகளை நீட்டி உரத்து சொன்னான் “Johnians! Always play the game.” அதிபர் ஆனந்தராஜா அதை பற்றிக் கொள்கிறார். அணித்தலைவர் மற்றைய வீரர்கள், குறை சொல்லும் உதவி அதிபர், பயிற்றுவிப்பாளர் எல்லாரும் ஒருங்கே கைகளை இணைத்து சேர்ந்து கோஷமிட்டனர் - Johnians! Always play the game. அந்த அறை மீண்டும் உயிர் பெற்றது…. வெளியில் இப்போ இன்னொரு கும்பல் பாடத் தொடங்கியது, மைதானத்திற்கு வர இருக்கும் துடுப்பாட்ட வீரர்களை வரவீர்க்கும் முகமாக – We will… We will… ROCK U!. தும்தும்தும் தகர ட்ரம் அதிர்ந்தது, மீண்டும் We will… We will… ROCK U!. தும்தும்தும்.

துடுப்பாட்ட வீரர்கள் கைகளை சுழற்றிக் கொண்டு களம் காணத் தயாராகுகிறார்கள், டிஎஸ்பியை அணுகிய அதிபர் அவன் தோள்களைத் தட்டி சொன்னார் – it is your day தம்பி, remember Johnians! Always play the game.

இவ்வளவு நேரமுமிருந்த குழப்பம் நீங்கி கண்களில் தீர்க்கமும் ஒளியும் தெரிய அவன் தலையை ஆமோதித்து அசைத்து சொன்னன் Johnians! Always play the game………..வசனம் முடிக்க முதல் அதிபர் திரும்பி மேல் மாடிக்கு நகர்கிறார்…. இவன் ஆனந்தி என்று காதலுடன் வாய் மொழிய வேம்படி கல்லூரி மாணவிகள் கூஊஊஊ…. என்று கத்த, பதிலுக்கு சுண்டுக்குளி மாணவிகள் இவன் பெயரை ஆர்ப்பரிக்க, வாய் ஆனந்தி என்று முணுமுணுத்ததை யாரும் கவனியாது விட…. வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப் படும், நூற்றாண்டு பழைய பரியோவான் கல்லூரி மத்திய கல்லூரிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின், 1982ம் ஆண்டிற்கான வருடாந்த துடுப்பாட்டப் போட்டியின் (cricket) இறுதி கட்டம் ஆரம்பமானது.


ஏறத்தாள ஒருவருடத்துக்கு முன்னர் எரிந்து அணையாத நூலகம், முனியப்பர், கோட்டை, பண்ணைக்கடல், எல்லாம் வெறித்துப் போய் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் ‘மத்தி’யில் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைந்திருந்த மனிதர்களின் முழுக் கவனத்தையும் உள்வாங்கி அந்த அராவரத்தை விழுங்கி நின்றனர் அந்த இருவரும்.

தொடரும்…….


Johnians என்பது பரியோவான் கல்லூரி மாணவர்களை குறிக்கும், பரியோவான் கல்லூரி கீதத்திலே இந்த வரிகள் வருகின்றன
Your Alma Mater's ancient name,. Johnians !Always play the game
உசாத்துணை:

வியாழன், ஜூன் 21, 2012

யாக்கைகள் கொண்டொரு யாகம் - II

முந்தய பாகம்
ஒரு தென்றல்க் காற்று
அந்த மரத்தின் ஒவ்வொரு இலைகயையும்
திருப்பிப் பார்த்ததுக்கொண்டிருந்தது.

ஒரு புது கொப்பியின்
எல்லா வரிகளிலும்
முத்து முத்தாக
கவிதை எழுத முயன்று கொண்டிருந்தான்.

நீ என்ன வேணும் எண்டாலும் எழுதிக்கொள்
என்ற அர்ப்பணிப்பில்
கொப்பியின் ரசனை தெரிந்தது.

கைகள் முயல்கள்
தலை எலி
நெஞ்சு பட்டம்
இடுப்பு சமுத்திரம்
கால்கள் வேர்கள்.

முயல்கள்
அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன
பயமா? பசியா?

எலி
திடீரெண்டு மறைவதுவும் பின் எழுவதுவும்
நிற்காமல் அலைந்துகொண்டிருந்தது.

சமுத்திரத்தில்
பௌர்ணமிகாலத்து அலை.

வேர்கள்
ஆழ ஊடுருவி
இறுகப் பற்றிக் கொண்டிருந்தன.

பட்டம்
சாய்வாகவும் குத்தாகவும்
காற்றின் போக்கில் பறந்து கொண்டிருந்தது.
தவறுகளும் செரி
தண்டனைகளும் செரி
அத்தனை இனிப்பு.

அறுபத்தி மூன்று கலைகளும்
ஒன்று சேர்ந்தது என்பதால்தான்,
பேரின்பம் கூட இதன் மீது பயம் கொள்கிறது.

சரணாகதியும் ஆட்கொள்ளலும்,
சரியை மார்க்கம்,
கிரியை மார்க்கம்,
யோக மார்க்கம்,
ஞான மார்க்கம்,
எல்லா மார்க்கத்தின் வழியும்
அததற்க்கான முக்திகளும்.
இதுவும் பேரின்பம் தான்.
ஆனால்
கடவுள் வேறு
பக்தன் வேறல்ல.

உலகில்
அதிகம் காமிக்கப் பட்டதும்
அதிகம் காமிக்கப் படாததும் – இதுதான்.

காமத்தின் பால்ப் பட்டு
அவர்கள் செய்ததெல்லாம்
காமத்துப்பாலிலும் சொல்லாதது.

முந்தய பாகம்

வெள்ளி, ஜூன் 08, 2012

தாவீது அடிகளார் புத்தகக் கடையும் Database System உம்

தாவீது அடிகளார் என்பவர் ஒரு புத்தகக்கடை துறந்தார் - தாவீது புத்தகக்கடை David Book Stores. அந்தக் கடையை எல்லாரும் DB, DB என்று அழைத்தனர். அந்தக் கடையில் கல்லாவில் இருக்கும் அடிகளார் ரொம்ப ஸ்டிரிக்டு, அதால அவரை டீமன் (daemon) எண்டு மரியாதையா அழைப்பது வழக்கம். இந்த டீமன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை ‘You Sir’, ‘You Sir’ என்று அழைப்பார் அது மருவி யூசர் (user) என்று ஆகியது, அந்த கடையில் வேலை செய்யும் எல்லாரும் வாடிக்கையாளர்களை யூசர் என்று அழைப்பது அந்தக் கடையின் வாடிக்கை ஆகி விட்டது.

புத்தகம் வாசிக்க இன்னுமொரு சாட்டு.

இந்தக் DB கடையில வாங்கி விக்குறதுதான் வேலை. Users வந்து பாத்துட்டு போவினம்(Read), வாங்கிப் போவினம்(Delete), வித்துப் போவினம்(Create), கொடுக்கல் வாங்கல்களை செரி செய்து போவினம்(Update). சில சமயங்களில் புதுதாக புத்தக வகைகளை கொணர்ந்து விப்பினம். அப்ப அதுக்கெண்டு அலுமாரியில் தட்டு ஒதுக்க வேண்டும். அலமாரிகளும் நிரம்பின பிறகு புது அலமாரி வேண்ட வேணும்.
கடையில வியாபாரம் அதிகமாகி விட்டதால பில்லு போட ஒரு மேனேஜரை நியமித்தார் அடிகள். அவர் பெயர் தீ.ரா.ஜாக்சன். இவரை வேடிக்கையா எல்லாரும் தி’ராங்’க்சக்சன் என்று அழைப்பதற்கு ஒரு காரணமும் இருக்கு. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை ராங்கு (wrong) பண்ணாம ஒழுங்கா ஒரு ஒடரில வியாபாரம் பண்ண அழைத்து செரியா கணக்கு பதிவதால் இவரை the-wrong-jackson = transaction manager என்று அழைப்பர்.

எந்தப் எழுத்தாளர் புத்தகம் எந்த அலமாரியில் இருக்கு எண்டு ஒரு அட்டவணை வைசிருப்பார் நம்ம டீமன், அதை இண்டெக்ஸ் எண்டு சொல்லுவினம். கடையில பலதும் பத்துமா புத்தகங்கள் இருக்கும் பய புள்ளைக ஆர்வமா வருவானுக அவைகளை அளந்து பாத்து யார் எதை வாசிக்கலாம், யார் எதை விக்கலாம், யார் வீட்டுக் புத்தகக் கணக்கை யார் யார் மாத்தலாம் எண்டு ஒரு முடிவை டீமன் அண்ணை எடுப்பார் இதை அக்செஸ் ரைட்ஸ் (access rights) எண்டு சங்கேதம் சொல்லுவினம். தாவீது கண்ணைக் காட்டினா கடைப் பெடியளுக்கு விளங்கிடும் யாருக்கு என்ன அக்செஸ் ரைட்ஸ் எண்டு.
மாதத்தின்  முதல் புதன் கிழமையில வருகிற அந்த இந்திய மாதாந்த சஞ்சிகைக்கு ஒரு பலத்த வரவேற்ப்பு இருக்கு, இப்படி எந்த காலத்தில எதை அதிகம் வாங்குவினம் எண்டு தெரிஞ்சு அதை கல்லாவுக்கு கிட்ட வைச்சிருப்பார் - இதை ஸ்டோர் ப்ரோசீஜர் (stored procedure) எண்டு அவை வியாபார பாணியில சொல்லுவினம்.


ராஜேஷ் குமார் நாவல்கள் தனியா சுஜாத்தா நாவல்கள் தனியா அடிக்கி இருந்தாலும் அவயிண்ட துப்பறியும் நாவல்களுக்கு மீசை முளைச்ச ராணிக்காமிஸ்களிட்ட ஒரு கிராக்கி இருந்தது, அதுக்காக அவர் இந்த கிரைம் புத்தகங்களை எல்லாம் ஜொயின்(join) பண்ணி ஒரு சீ-ஆர் கொப்பியில எழுதி வைச்சிருப்பார் - இந்த சீ-ஆர் கொப்பிய கிரைம் வியூ (view) எண்டு கடைப் பெடியள் சொல்லுவானுகள்.

இப்படி சீரும் சிறப்புமாய் புத்தகக் கடை நடத்தி இருக்க வேண்டிய தாவீது அடிகள் யாழ்ப்பாண நூலகம் எரிந்த சேதி கேட்டு பொறுக்காமல் உயிர் நீத்தார்.

                   
சமர்ப்பணம் தாவீது அடிகளார் - யாழ் நூலக எரிப்பு சேதி கேட்டு உயிர் நீத்த புத்தகக் காதலன் + புத்திஜீவி + கல்விமான்.

அர்த்தமுள்ள வலைத்தளங்கள் பற்றிய என் தகவல் தொழில்நுட்ப தொடர்பான இன்னொரு பதிவு.

வெள்ளி, ஜூன் 01, 2012

யானைக்கு மணிகட்டுவது யாரு ?



திடீரெண்டு மிக்சிங் செரியாகாம எகிறிக்கொண்டு இருந்த ஒரு நடு சாமத்தில அந்த யோசனை வந்தது. யானைக்கு மணி கட்டலாம். அட பூனை எண்டா வழமை. நம்ம ரேஞ்சுக்கு ஒரு யானைக்காவது மணி கட்டினாத்தானே செரியா இருக்கும்.

யானைக்கு மணி கட்டலாம் எண்டு வெளிக்கிட்டா யாரை துணைக்கு கூப்பிடலாம் எண்டு ஒரே குழப்பம். பூனை நாய் எண்டா கஜேந்திரன கூப்பிடலாம், யானைக்கு ஓம்பியை கூப்பிடலாம், அட நக்கலுக்கு இல்லை, அவன் வெளிய இருந்துதான் எப்பவும் ஆதரவு தருவான். நல்ல பொடியன் பலரிண்ட காதலுக்கு துணை போனவன் ஆனா நம்பேலாது திடீரெண்டு இந்தியாவுக்கு பிரதமமந்திரி ஆக்குறன் எண்டு கூட்டிக்கொண்டு போடுவான் - டேஞ்சரஸ் பெல்லோ. இத்தாலில இருந்து வந்தா விடுவானுகள் - நரி நீலமாயிருக்கெண்டு, நாமளும் பிரவுன் நரிதானே. இவனேன் எப்ப பார்த்தாலும் சனியன் சகடை கிங்கு மேக்கர் மாதிரி பேசுறான் எண்டு விளங்கேல்லை ஒரு நாய்ப் பிரியனோட பலகால சவகாசமாயிருக்கும். அட யானைக்கு மணி கட்ட வெளிக்கிட்டு வெளிஊர்க்கதைக்கு போயிட்டன்.

வேற ஒண்டுமில்லை யானைக்கு மணி கட்ட வேணும், சும்மா தானே நிக்குது ஒரு மணியை கட்டி விட்டா மணியா இருக்கும் எண்டு பாத்தன் (அட எவண்டா அவன் இசகு பிசகா யோசிக்குறது). யானைக்கு மணிகட்ட எண்டு ஒரு பேசு-புக்கு குரூப் தொடங்கலாம் எண்டு யோசிச்சன். சிக்கல் என்னெண்டா குரூப்பில யாரை சேர்க்கிறது எண்டு ஒரே குஷ்டமப்பா - அட சீ கஷ்டமப்பா. யானைகளை மட்டும் சேர்க்க சொல்லிச்சினம், சிலர் மணி செய்யுரவை எண்டுச்சினம். அப்ப யாரு மணிக் கட்டுறது - தூக்கி போட்டு மிதிச்சுதெண்டா ? மணி கட்டுறவையும் குரூப்பில வேணுமில்லை.

அப்புறம் மணியடிக்க ரெண்டு பேர், அதுக்கு ஒரு பசன் ஷோ நடத்தி, இல்லை பாட்டுப் போட்டி - சுப்பர் சிங்கர் யானை - வழகுவது எலிபன்ட் ஹவுஸ். வெண்ட யானையை கோல் ரோட்டில் குப்பை அள்ள விட்டு பிரச்சரிக்கலாம், மரம் நட வைக்கலாம், தண்ணியை யானை தும்பிக்கையில விசிறி அடிச்சா (மரத்துக்குத்தான்) டி.ஆர்.பி எகிறுமில்லை. அட இவளவு யோசிக்க முதல் குரூப்புக்கு ஒரு அட்மின் கண்டுபிடிக்கோணும். அட்மினுக்கு நிறைய வேலை – ஆட்சேர்ப்பு, ஆட்கொணர்வு, ஆக்களை தூக்குறது, கொமென்ட் மொடரேசன் ஆக மொத்ததில அந்த குரூப்புக்கு சிக்கின அடிமை - ரொம்பா நல்லவர். யாரு அதுக்கு செரியா வருவான் எண்டு மூளையைக் கசக்கி யோசிக்காம டான் எண்டு சாயியை தான் யோசிச்சனான் - ரொம்ப நல்ல பெடியன், பெரிய இடம் பில்லா படத்துக்கே பி.எம்.டபிள்யு சப்ளை பண்ணுறார் எண்டா பாருங்கோவன்.

செரி குரூப்புக்கு என்ன பேர் வைக்கலாம், யானை எண்டு வைச்சா, மணியகாரர்கள் கோவிப்பினம், மணி-யானை எண்டா எதோ தப்பா படுது. யானையும் மணியும் 2011 எண்டு வைக்கலாம் எண்டா 2010 இல செத்துபோன யானை எல்லாம் கனவில வந்து விரட்டும் - செரி யானை ரீயூனியன் எண்டு வைக்குறதா முடிவெடுத்தம். யானைக்கு மணி கட்டுறதா இல்லை யானைகளுக்கு ரீயூனியன் வைக்குறதா எண்டு ஒரு அறிக்கைப்போர் தொடங்கலாம் எண்டு கள நிலவரங்கள் தெரிவித்ததை நாங்கள் கணக்கேடுக்கேல்லை. யானை பெரிசா இருந்தா போதும் பிளிருதா எண்டது பிரச்சனை இல்லை - பிளிருற யானைக்கு மதம் வராது எண்டு ஒரு பழமொழி இருக்கல்லே.

குரூப் எண்டு தொடங்கினா நாலு பேர டாக் பண்ணி ஒரு போஸ்ட் போடனும் இல்லை கவிதை கதை கத்தரிக்காய் எண்டு வருத்தேடுக்கோணும். கொமென்ட் போடாதவங்களை சாட்டில் பிடித்து காச்சோணும், இப்பிடி நிறைய சமூக வலைத்தள அங்கீகரிக்கப்பட்ட வன்முறைகளால் வடம்பிடிச்சாத்தான் உண்டு.


திடீரெண்டு மணி வேண்டுறதில ஒரு சிக்கல் - மணிக்கு மணியைக் குறைச்சு கரும்பு வேண்டி போடச்சொல்லி ஒரு குழப்பம், நல்லகாலம் கரும்பு வளர்க்க சொல்லி எதிர்க்கேல்லை. இந்த மணிகட்டலுக்கு ஆள் சேர்க்க டாக்குத்தர்மார் ரெண்டு பேரக் கேட்டன் ஒருத்தன் ரோடு போடுரதைக் காட்டிலும் ரோடு மேல கார் உடுரதில விண்ணன், மற்றவன் மரமேருறதிலைக் காட்டிலும் மரத்திலிருந்து ஆள் இறக்குறதில, சும்மா படுத்திருந்தவனை மரத்தில ஏத்தி விடுறதில விண்ணன். இவனுகளை கூப்பிட்டா வழி கிடைக்கும் எண்டு பார்த்தா, யானையோட தமிழில்தான் கதை, அதுக்கு பனங்கிழங்கு கொடுக்கோணும் எண்டு டிமாண்டுகள் வைச்சானுகள்.

இதுசெரி வராது எண்டு கனடாவில இருக்குற மச்சானைக் கூப்பிட்டலாம் எண்டா, அவன் வானத்தில இருந்து டார்ச் அடிக்குற பயபிள்ளைகளோட (aliens) சாவகாசம் வைச்சிருக்குற ஆளு கொஞ்சம் டேக்கு மாக்கு பேர்வழி - ஆனா எதையும் ஒரு அறிவுபூர்வமா அணுகுவான். அவனைக் கேட்டா யானை எல்லாம் உண்மையில ஒரு பறக்கும் தட்டுகள் எண்டான். இதென்னடா புதுக்கதையா இருக்கு எண்டு பாத்தா, வெள்ளை யானை வாலைப்பிடித்துக்கொண்டு சொர்க்கம் போன அப்புகாமி தெரியுமா எண்டான் - அப்பத்தான் அவன் நெஸ்பிரேக் கதைகளிலேயே இன்னமும் இருக்குறான் எண்டு விளங்கிச்சுது.

அண்மைக்காலமாக யானை எக்ஸ்பேர்ட் ஆகிவரும் ஜேகேட்ட கேக்கலாம், மனுசன் பிரசண்டேசனில நித்திரை கொள்ளுரவனுகளுக்கே யானை விட்டு வேருட்டுதாம், பெரிய அம்பானி சீ அம்பாரி, அட சீ அது யானை மேல போடுற மேட்டர், அதென்னது ஆ பாகனா இருப்பார் போல. ஆனா கலர் கலரா யானை காட்டுமே, போதாக்குறைக்கு முதலிலேயே யானைய காட்டிடணும் இடைக்க புதுசா ஒரு யானை வேணாம் எண்டும். யானைக்கு மணியைக் கட்டுங்கோ எண்டா முயலைப் பிடிச்சுக்கொண்டு வந்தாலும் வரும் அதுவும் கையப் பிடிச்சு இழுத்து. செரி பரவாயில்லை எண்டு கேட்டா, சீமான் தனக்கு அரசியல் தெரியாது நீ வியாழமாற்றத்தில கேள்வியைக் கேளு சொல்லுறன் எண்டுது.

இவளவு சிக்கலோட யானைக்கு மணி கட்டத்தான் வேணுமா எண்டு என்னைக் கேட்டா நான் பூட்டின கதவை திறந்து சத்தமா சொல்லுவன் - யானைக்கு மணி கட்டுறதில இதெல்லாம் சகஜமப்பா.
டோண்டு வொரி பீ ஹப்பி.

வியாழன், மே 31, 2012

யாக்கைகள் கொண்டொரு யாகம்.



நெற்றியின் மத்தியில்
நெரிகின்ற புருவங்களுக்கிடையில்
கனன்று எழுந்தது தீ.
காதின் மடல்களில்
ஊர்ந்தன ஓராயிரம் அக்கினி குஞ்சுகள்.

கன்னம் கதப்பில் வெந்தது.

வியர்வைக் குளியலிலும்
அடங்காத வெம்மை.

சுமார் முப்பது இலட்சம் வீரர்கள்,
பெரும் படை எடுப்பு,
கெதிப் பாச்சல்,
ஒரு வீரனையாவது
எதிரியின் எல்லைக்கப்பால் சேர்க்க.



நாளைக்கு என்று சேர்க்கும்
பெரும் சொத்து.

இயற்கை எல்லா உயிர்க்கும்
பிழைப்பு சொன்ன வழி.

இரண்டு உயரமுக்க மண்டலங்களில் இருந்தும்
புயல் வீசியது.
வெள்ளம் பெருக்கெடுத்தது -
ஓராயிரம் ஊற்றுக் கண்களில் இருந்து.
சட்டென்று பெய்தது மழை,
உள்ளே ஓடியது ஒரு மின்னல்.
கன்னங்களில் வெய்யில்.



என் கன்னிமையும் உன் கன்னிமையும்
களவாடிக் கொண்டோம்,
அனால் இது கற்பியல்
களவியல் அன்று.

ஒரு பெரும் பூக்குவியல்,
இரண்டு பூங்குன்று,
இரண்டு கருவண்டுகள்,
ஒரு மரமும் அதன் வேர்க்கான வழிகளும்.
பூக்களைத்தான் பறியுங்கள் என்ற அழைப்பும்.



குரங்கின் கைப் பூமாலை – சீ… சீ…
காட்டுப் பன்றியும் கத்தரிப்பூ தோட்டமும் – சீ… சீ…
இது ஒரு புரட்சி!
அங்கொரு தீண்டலும், இங்கொரு சிணுங்கலும்,
மேதினி எங்குமாய் ரதோற்சவம்,
அடக்கி வைத்ததெல்லாம்
பொறுக்காமல் வெடித்தது.
வெந்து தணிந்தது காடு - இது ஒரு புரட்சி.



முதிரை தாளம் போட்டது,
வாய்கள் மௌத் ஒர்கன்,
மூக்கு ஒத்து ஊதியது,
இன்னும் சில………..
பெயர் தெரியா…….
(வாத்தியங்கள் கருவிகள் )
இச்சை வற்றிவர
ஒரு இன்னிசைக் கச்சேரி.


அந்த தொழிற்ச்சாலையில்
இரண்டு தொழிலார்கள் மாத்திரம்.
ஏற்றுமதி இறக்குமதி.
உயிர்த் தொழிற்சாலை.


உயிர்த் தொழிற்சாலை.
ஏற்றுமதியும் அதுவே
இறக்குமதியும் அதுவே.
இருவரும் ஒரு முதலாளிக்கு
தேர்வு நடத்துகின்றனர்.



நான் என்னை உனக்கு காமிக்க,
நீ உன்னை எனக்கு காமிக்க, – இல்லை
நான் உன்னை உனக்கு காமிக்க,
நீ என்னை எனக்கு காமிக்க, -
இல்லை இரண்டுமாய் – அது காமம்.

சனி, மே 26, 2012

ஓட ஓட ஓட தூரம் கொறயலை....

எல்லாப் படங்களிலும்
எதோ ஒரு தருணம்
இறந்து தொங்கிக்கொண்டிருக்குறது.

அந்த புகைப் படத்தின் மூலையில்
நிறமிழந்த பகுதிக்குள் ஒளிந்திருக்கு
என்னைத் துரத்தும் இருட்டு.

ஆணியில் தொங்கும்
அந்த மரச் சட்டங்களுக்குப் பின்னால்
ஒரு சிலந்தி இல்லாத வலையில்
யாருக்காக என்று தெரியாமல் இறந்து கிடந்தது
ஒரு கட்டெறும்பு.

மரச்சட்டங்களுக்கிடையில்
ஒரு நீர்க்காட்டின் படம்.
இங்கே ஒரு நீர்க்காடு இருந்தது என்பதை
நிலவரிக் கோடுகள் சான்று சொன்னது.
நீர் வற்றி காடு ஒற்றை மரமாய்.



நீர்க்காட்டின் நடுவே நின்ற
அந்த ஒரே மரத்திற்கு எஞ்சிய சில கிளைகளில்
மிஞ்சி இருந்தன சில இலைகள்
எந்த சூரியனுக்காகவோ ?
மூலையில் நிறமிழந்து போனது
சூரியனாய்க் கூட இருக்கலாம்.

தலைவாருகிற போது
எதிரே நிலைக்கண்ணாடியில் ஒரு நீர்க்காடு.
என் கண்ணோரம் ஒரு அருவி,
அரிச்சந்திரன் கட்டின தாலி மாதிரி எனக்கு மட்டும் தெரியும்.
என் நெஞ்சோரம் ஒரு நெருஞ்சி,
சகுந்தலை மோதிரம் மாதிரி எனக்கு மட்டுமே நினைவிருந்தது.


அரசனாய் இருந்து வெட்டியானாய்,
வெட்டியானிலிருந்து மீண்டும் அரசனாய்.
ம்கூம் , கலி என்னை விட்ட பாடில்லை.
துரத்திக் கொண்டே இருந்தது அந்த அந்தகாரம்.




ஏடும்
எழுத்தாணியும்
சில கவிதைகளும்
நானும்;
கூடவே அந்த இருட்டும்.

சனி, மே 05, 2012

எங்கே எனது கவிதை?

எங்கே எனது கவிதை? "இரும்புகுதிரை"

மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியிலிருந்து வரும் ஓசை ஆரம்பத்தில் நிறைய எரிச்சலை தந்தது. இப்போ பழகி, அதைக் கேட்டாலே நித்திரை சொக்குமளவுக்கு ஆகிப்போனது. ஆனால் இன்றைக்கு அது மனதில் மையம் கொண்டிருந்த பெரும் எண்ணச் சுழலுக்கு ஒத்திசைத்தாற் போல் இருந்தது. நாளை கல்கிசைப் போலீசிடம் சென்று பிறந்த கதை வளர்ந்த கதை எல்லாம் சொல்ல வேணும் - கொழும்பு வரும் போது போட்டிருந்த அண்டர்வியார் நிறம் வரை கேப்பானுகள். சிங்களத்தில் விறுவிறு என்று ஏதோ எழுதுவானுகள். நான் சொல்வதைத்தான் எழுதுரானா என்று தெரியாது.


அந்தக் கட்டிலுக்கு மரக்கால் இரண்டு, மற்றயவை செங்கல் மற்றும் உடைந்த ஒரு பிளாஸ்டிக் வாளி கொண்டு இட்டுக்கட்டியது. எனக்கு அடுத்து திரும்பி படுத்திருப்பவன் இரண்டாவது தம்பி - உமா. அங்கால கீழ படுத்திருப்பவன் முதல் தம்பி - கோபி. அவனிலிருந்து சில அடி தூரத்தில் பெரிய பாக்குகள் சூட்கேசுகள் பிறகு படி கீழே செல்லும். ஒரு மூன்றுக்கு மூன்று அடி பாத்துரூம் கீழே, பாசியும் உடைப்பும் வெடிப்புமாய். பிளஷ் செரியா வேலை செய்யாத கோமேட்.

மாசம் இரேண்டாயிரத்தில் மூன்று பேரும் சாப்பிட வேண்டும், வாடகை + கரண்ட் பில் + வாட்டர் பில் எல்லாம் சேர்த்து அப்பா கட்டி விடுவார். இரண்டாயிரத்தில் கொழும்பில் மூன்று பேர் - கருப்பன் அரிசி, கஞ்சி, தேங்காய் சொட்டு, சின்ன றால் பொரித்து, பொரித்த கச்சான் சேர்த்த யெல்லோ ரைஸ் கனவுகள் காண்பதை தவிர்த்து சில மாசங்கள் இருக்கும்.

காற்றில் கரைவது
கனவா விதையா ?
உமா வந்து ஒரு மாசமிருக்கும், வவுனியாக் காம்புக்கால தப்பி பிழைச்சு வந்தான். முன்னோர் புண்ணியத்தில் அப்பா டாக்குத்தர், பிள்ளையாருக்கு வைத்த நேர்த்தி சென்ற்றியில நிண்டவனுக்கு காது நோவா வர - தப்பி பிழைச்ச கதை ஒரு திரில்லர் படம். படம் எண்டதும் நான் எழுதி முடிக்காத படம் நினைவில் வந்தது, மேசையில் அந்த கொப்பி பாதி திரைக்கதை சில பாடல்களுடன் ஃபான் காத்தில் துடிச்சுக் கொண்டிருந்தது. அந்தக் கொப்பிகள் தொலைந்து மயிலிறகாய் என்னுடைய கனவுகள் கனக்க பத்திரமாய் , சட்டென்று இந்த மாசத்திற்க்கான காசுப்பிரச்சனை வந்து சிந்தனையை வெட்டி வயிற்றை பிசைந்தது.

போன கிழமை உமாவிட்ட நூறு ருபாய் சாப்பாடுக்கு குடுத்திருந்தன், அவன் சந்தோசமா கொத்து ரொட்டியும், கோக்கும், கோழிக் குழம்பும் சாப்பிட்டு விட்டு எங்களுக்கும் அப்பம் வாங்கிக்கொண்டு வந்தான், அது ஒரு கிழமைக்கான (ஒரு வாரம்) காசு ஒரே நாளில் முடிச்சிருந்தான். இப்பதானே வந்திருக்குறான், அவனுக்கு சிக்கலை செரியா சொல்லேல்லை. கீழே படுத்து குளிரும் மழைத் தண்ணியும் போய் கோபிக்கு காது நோ. அதுக்கும் ஒரு வழி பண்ண வேணும்.

கொப்பியின் மட்டையும், இரண்டு பக்கங்களையும் காத்து திருப்பி மூன்றாவது பக்கத்தோடு சில்மிஷம் பண்ணிக் கொண்டிருந்தது.

நேற்றுத்தான் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மாண்ட கடிதம் வந்தது. உதயாவும் ஒரு கடிதம் எழுதி இருந்தான். கடைசி தம்பி - தனியே அங்க அம்மா அம்மாமாவுடன், எப்படி சமாளிக்குரானோ. கரண்டில்லை, எண்ணை இல்லை, கடைகளுமில்லை எப்படி ?, அப்பவாவது கடைகள் இருந்திச்சி - கொஞ்சம் பரவாயில்லை, இப்ப ஆமிக்காறனுகள் - எதையும் கடிதத்தில எழுதேல்லை.

நேற்று கூட பஸ்ஸில் போகேக்க ஒரு நல்ல கவிதை வந்தது, எழுதி வைக்க நேரமில்லை இப்ப மறந்துட்டுது. முந்தி ஏ.எல் எக்சாமை கிண்டி கவிதை எழுதிக்கொண்டு இருந்தன், பயோ படித்தன், டாக்குத்தர் ஆவன் எண்டு சுற்றம் சொல்லிற்று, கெமிஸ்ட்ரி பிடிச்சுது, பயோ சயன்ஸ் டிகிரி முடிச்சு, இப்ப கொழும்பில, அடுத்து ? ஊருக்கு கடிதம் எழுதோணும், நூறு ரூபாய மனேஜ் பண்ணோணும். புத்தி பர பர எண்டது காது நோவுக்கும், காசுக்கும் - எதுகை, ஊருக்கு கடிதம் - மோனை கண்டது.

ஊருக்கு கடிதம் மட்டும் காணாது, தனியே, இன்னமும் இடம்பெயர்ந்த சுற்றம் வந்து சேராமல், எந்த பராக்கும் இல்லாமல் - ஆ ஒரு ரேடியோ சின்னது பற்றியோடு வாங்கி அனுப்பினால் பொழுது போகும், செய்தி கேக்கலாம். கட்டாயம் வேணும். பெட்டாவில கொஞ்சம் மலிவா சின்னது ஒண்டு கிடைக்கும் எஸ்.டபிள்யு வோட வாங்கினா பி.பி.சி கேக்கலாம். கொழும்பில் ஒரு கிழமைக்கு மூண்டு பேர் எவ்வளவு குறைவான காசில சீவிக்கலாம் ? பருப்பு மட்டும் கடையில வேண்டி பாணை தனிய வாங்கினா கொஞ்சம் மிஞ்சும், இந்த சூட் கேசை யன்னல் பக்கம் வைச்சு கொஞ்சம் வெள்ளம் குறைக்க பாக்கலாம், அப்பத்தான் கீழ படுக்கலாம். மழை பெரிசா அடிக்காட்டி பெட்டர். மூளை மனது உடம்பு சேர்ந்து ஒரு தீ பர பர எண்டு எழுந்தது. காத்து கதைக் கொப்பியை பிரட்டி கீழ விழுத்தியது.

கொப்பியை எடுத்து வைச்சுட்டு பார்த்தா சண்டே லீடரில கொம்புயுடர் வேலைக்கு விளம்பரம் வந்திருந்தது. காலைச் சூரியனின் செம்மையை எதோ பெயர் தேரியாத பறவை தகவல் சொன்னது. ஒரு போருக்கு நான் தயார் ஆனேன், கதையும் கவிதையும் மறந்தே போனது. காற்று மட்டும் இன்னமும் அந்த எழுதி முடிக்காத படக்கதைக் கொப்பியோடு சீண்டிக் கொண்டிருந்தது.

பி.கு: இரும்புகுதிரை என்பது பாலகுமாரன் எழுதிய ஒரு அற்புதமான நாவல், அதை வாசித்தவர்களுக்கு அதை இங்கே Caption ஆ பாவித்ததன் பொருள் விளங்கும்.

வெள்ளி, மே 04, 2012

ஒரு போராளியின் கதை - II: தேரை நினைவு

முந்தய பாகம்
ஒரு போராளியின் கதை: பகுதி இரண்டு -தேரை நினைவு.




ஊருக்குப் போய்ப் பார்த்தா உற்றாரில் சிலரில்லை
வீட்டுக்கு போய்ப் பார்த்தா உத்தரத்தில் மீதியில்லை
பேருக்கு கூட கோயில் கோபுரத்தில் மிச்சமில்லை
ஆட்டுக்கு மட்டும் கொம்பென்னும் இளைக்கவில்லை


உற்றாரில்லாட்டியும் உறவென்னும் மிச்சமிருக்கு
உத்தரமில்லாட்டியும் நாய்க்கென்னும் சோறிருக்கு
கோபுரம் இல்லாட்டியும் குயில மணி ஓயவில்லை
கொம்பு இளைக்காத்தால வீம்பென்னும் போகவில்லை






காடு மேடு போன கால்கள் கன்னியை தேடுது
நித்திரை மறந்த கண்கள் அவள் சித்திரத்தை தேடுது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது - அவள்
நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது


அவள் நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது.


நினைவில் பூத்த பூ

தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ? - இல்லை
போர் மேகம் வந்ததனால் தொலைவுக்குப் போனாளோ?
நாகை கருங்கூந்தல் நரையோடி இருக்குமோ?
கார்மேகம் என (என்னை) இன்னும் எண்ணி இருப்பாளோ?


தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ?
கார்மேகம் என என்னை எண்ணி இருப்பாளோ?


பிள்ளைப் பராயம் கல்வியோடு போகவில்லை
விடலைப் பருவம் விரும்பியபடி அமையவில்லை
காளைப் பருவமது கடும் யுத்தம் புரிந்தபடி
கடைசிப் பருவம் அவள் கனவுகளில் கழியட்டும்.




தாய் மண்ணை தனயர் நாம் சுமந்திட்ட வரலாறு
பத்து மாதமல்ல பயிற்ரிரண்டு வருடங்களாய்: கரு வயிற்றில் - அந்தப்
புந்தி உடைத்து புகழ் கொண்டார் உலகமெல்லாம் - அந்தப்
பந்திக்குப் போகமால் குளவி செய்வீரோ அக்குருதி ?


பாரெல்லாம் பரந்தவனே - இந்தப்
போராளியின் கதை கேட்டாயா ?
கார் மேக வண்ணா - இனி
போராடா வருவாயா ?


கார் மேக வண்ணா - 
இனிப்போர் ஆட, வருவாயா ?

இனிப் போராடலாம்......


அடுத்த பாகத்தில் போராடலாம் இனி.